இத்தாலியில்..
இத்தாலியில் கொரோனா வைரஸ் பாதிப்பு மூன்றாம் கட்டத்தை எட்டி மிக வேகமாக பரவி வருகிறது. இறப்பு எண்ணிக்கையும் அங்கே அதிகமாக உள்ளது. துவக்கத்தில் இத்தாலியில் பலரும் கொரோனா வைரஸை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.
கால்பந்து போட்டிகள் நடந்தது
கால்பந்து வெறியர்கள் கொண்ட அந்த நாட்டில் கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்ட போது கூட கால்பந்து போட்டிகள் தடைபடவில்லை. மக்களும் ஊரடங்கு உத்தரவை மதிக்காமல் வெளியே சுற்றிக் கொண்டு இருந்தனர்.
சிக்கிய கால்பந்து வீரர்கள்
அதன் விளைவாக அங்கே இதுவரை 86,000 பேருக்கும் மேல் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,000 பேருக்கும் மேல் இறந்துள்ளனர். இந்த நோய் கால்பந்து வீரர்களையும் விட்டு வைக்கவில்லை. அவர்களுக்கு கொரோனா வந்த உடன் தான் அங்கே கால்பந்து போட்டிகள் நிறுத்தப்பட்டது.
மூன்று வீரர்களுக்கு பாதிப்பு
இத்தாலியின் சீரி - ஏ கால்பந்து தொடரின் பிரபல யுவெண்டஸ் அணியில் மூன்று வீரர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டது. அவர்களில் ஒருவர் தான் பாலோ டைபலா. அதே அணியில் தான் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் இருக்கிறார். அவருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
கொரோனா அனுபவம்
பாலோ கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு, அதில் இருந்து மீண்டு விட்டார். தன் கொரோனா அனுபவம் குறித்து மீண்டு வந்த பாலோ கூறினார். தான் மூச்சு விட முடியாமல் சிரமப்பட்டதாகவும், கடும் தசை வலியில் இருந்ததாகவும் கூறி உள்ளார்.
கடுமையாக வலித்தன
"எனக்கு கடும் அறிகுறிகள் இருந்தன. ஆனால், இன்று நான் சிறப்பாக இருக்கிறேன். இப்போது என்னால் நகர முடிகிறது. நடக்க முடிகிறது. பயிற்சி செய்ய முடிகிறது. சில நாட்கள் முன்பு நான் இவற்றை செய்ய முயன்றேன். அப்போது நான் கடுமையாக மூச்சு விட சிரமப்பட்டேன். என் தசைகள் கடுமையாக வலித்தன" என கூறி உள்ளார் பாலோ.
வரும் முன் காப்போம்
கொரோனா வைரஸ் பாதித்தவர்களில் சுமார் ஒரு லட்சம் பேர் உலகம் முழுவதும் மீண்டு வந்துள்ளதும் குறிப்பிடத்தக்கது. எனினும், அந்த பாதிப்பின் போது எப்படி இருக்கும் என்பதை தான் பாலோ கூறி உள்ளார். வரும் முன் காப்பதே நல்லது.