கொரோனா வைரஸ் அச்சுறுத்தல்
கொரோனா வைரஸ் உலகத்தை கடுமையாக அச்சுறுத்தி வருகிறது. இதுவரை 8,78,000 பேர் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 1,84,000க்கும் மேற்பட்டோர் மீண்டுள்ளனர். 43,302 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
அமெரிக்கா, ஐரோப்பா பாதிப்பு
இந்த வைரஸ் பரவும் வேகம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் பாதித்தோர் எண்ணிக்கை சில நாட்களில் லட்சத்தை தாண்டி, தற்போது 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. ஐரோப்பா கண்டம் தான் இந்த வைரஸால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
கால்பந்து போட்டிகள் நடந்தன
துவக்கத்தில் கொரோனா வைரஸின் தீவிரத்தை உணராத ஐரோப்பிய தேசங்கள் கால்பந்து போட்டிகள் உள்ளிட்ட பல போட்டிகளை தொடர்ந்து நடத்தி வந்தன. அதன் காரணமாக இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட தேசங்களில் கொரோனா வைரஸ் பாதித்தோர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது.
கோல்கீப்பர் பேபே ரெய்னா பாதிப்பு
கால்பந்து வீரர்கள் பலருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது. அவர்களில் ஒருவர் தான் ஆஸ்டன் வில்லா அணியின் கோல்கீப்பர் பேபே ரெய்னா. இவர் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து வருகிறார்.
ரெய்னாவின் அனுபவம்
அவர் தனக்கு கொரோனா வைரஸ் அறிகுறிகள் தென்பட்ட போதும், பாதிப்பு தீவிரமடைந்த போதும் என்ன நடந்தது என விவரித்துள்ளார். அதில் குறிப்பாக 25 நிமிடங்கள் ஆக்சிஜன் இல்லாமல் தான் தவித்தது பற்றி அவர் கூறி உள்ளது கொரோனா வைரஸின் உச்சகட்டத்தை பற்றி நமக்கு புரிய வைப்பதாக உள்ளது.
அறிகுறிகள் எப்படி இருந்தது?
"அந்த வைரஸின் முதல் அறிகுறிகளை நான் அனுபவித்த போது மிகவும் சோர்வாக இருந்தது. காய்ச்சல், வறட்டு இருமல், எப்போதும் போகாத தலைவலி. எப்போதும் சேர்வான உணர்வு இருந்து கொண்டே இருக்கும்." என கொரோனா வைரஸ் அறிகுறிகள் பற்றி கூறினார் பேபே ரெய்னா.
நோயின் தீவிரம் என்ன?
அதன் பின் தான் அவருக்கு அந்த நோயின் தீவிரம் வெளிப்பட்டுள்ளது. அப்போது தான் இனி மூச்சு விடவே முடியாது என எண்ணும் அளவுக்கு அவர் ஆக்சிஜன் இல்லாமல் தவித்துள்ளார். மரண பயத்தில் தொண்டை அடைத்துக் கொண்டதாகவும் கூறி உள்ளார்.
ஆக்சிஜன் இல்லாத நிலை
"மிக மோசமான தருணம் எது என்றால் இனி நான் சுவாசிக்கவே முடியாது என்ற அந்த நிலை தான். 25 நிமிடங்களுக்கு நான் ஆக்சிஜன் இல்லாத நிலையை அடைந்தேன். அதுதான் என் வாழ்வின் மோசமான தருணம்" என்றார்.
தொண்டை அடைத்துக் கொண்டால்..
"ஆக்சிஜன் இல்லை என்பதை நான் அறிந்த போது எனக்கு ஏற்பட்ட உண்மையான பயம் இது தான். என் தொண்டை திடீரென அடைத்துக் கொண்டால் எப்படி முடிவே இல்லாத பயம் ஏற்படுமோ அப்படி இருந்தது/ அதன் காரணமாக நான் அடுத்த ஆறு அல்லது எட்டு நாட்கள் வீட்டுக்குள்ளேயே இருந்தேன்" என குறிப்பிட்டுள்ளார் அவர்.
ரெய்னா நம்பிக்கை
தற்போது ரெய்னா இங்கிலாந்தில் உள்ள பிர்மிங்க்ஹாம் நகரில் தன் வீட்டில் தனிமையில் இருக்கிறார். கடந்த 18 நாட்கள் தனிமையில் இருந்துள்ள அவர் தான் இந்த நோயில் இருந்து குணமடைந்து வருவதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.