மும்பை : இந்தியாவில் வரும் நவம்பர் மாதத்தில் திட்டமிடப்பட்டுள்ள அன்டர் 17 பெண்கள் கால்பந்து உலக கோப்பை போட்டிகளை எதிர்கொள்வது மிகவும் கடுமையானதாக மாறியுள்ளதாக இந்திய உதவி பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் நடைபெறவுள்ள அன்டர் 17 பெண்கள் கால்பந்து உலக கோப்பை தொடரை எதிர்கொள்ள, இந்திய வீராங்கனைகள் அனைவரும் ஒன்றாக பயிற்சி மேற்கொள்வது அவசியம் என்றும் ஆனால் அவர்கள் அனைவரும் தங்களது ஊர்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு உலகளிவல் அச்சுறுத்திவரும் நிலையில், இந்தியாவில் அதன் பாதிப்பை தொடர்ந்து ஃபிபா கண்காணித்து வருகிறது.
சர்வதேச அளவில் அச்சுறுத்திவரும் கொரோனா வைரஸ் இந்தியாவில் ஏற்படுத்தியுள்ள பாதிப்பை ஃபிபா தொடர்ந்து கண்காணித்து வருகிறது. வரும் நவம்பரில் அன்டர் -17 பெண்கள் கால்பந்து உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இதில் பங்கேற்கவுள்ள இந்திய வீராங்கனைகள் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தங்களது சொந்த ஊர்களுக்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக உதவி பயிற்சியாளர் அலெக்ஸ் ஆம்ப்ரோஸ் தெரிவித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் வீட்டிலிருந்தே செய்யக்கூடிய பயிற்சிகள் அவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் ஆனால், அது அவர்களின் பிட்னெசை சரியாக வைத்துக் கொள்ளவே உதவும் என்றும், கால்பந்து உலக கோப்பைக்கான பயிற்சிகளை அவர்களை அனைவரும் ஒருங்கிணைந்து செய்ய வேண்டும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
கால்பந்து என்பது குழுவாக இணைந்து விளையாடக்கூடிய விளையாட்டு என்று கூறியுள்ள அவர், நவம்பரில் நடக்கவுள்ள அன்டர் -17 உலக கோப்பை தொடரில் அவர்கள் பங்கேற்று கோப்பையை கைப்பற்ற குழுவாக இணைந்து பயிற்சி எடுப்பது அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த மாதத்தில் இத்தாலி, ஸ்வீடன், ஜப்பான் போன்ற நாடுகளில் அன்டர் -17 மகளிர் கால்பந்தாட்ட போட்டிகளில் பங்கேற்று ஆட திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கொரோனா வைரஸ் காரணமாக அவை அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. அந்த போட்டிகளில், இந்திய மகளிர் பங்கேற்று ஆடியிருந்தால், அவை அவர்களுக்கு சிறப்பான பயிற்சிகளாக இருந்திருக்கும் என்றும் அலெக்ஸ் மேலும் கூறினார். இதன்மூலம் இந்திய அணி மேலும் வலிமையானதாக மாறியிருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
கடந்த மாதத்தில் ரோமானியாவுடன் மோதி, 1க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் இந்தியா வெற்றி பெற்றுள்ளது. வலிமையான அந்த அணியுடனான இந்த வெற்றி, சர்வதேச அளவில் வலிமையான அணிகளுடன் மோதும் துணிவை அணிக்கு அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். ஆனால் கொரோனாவால் கிடைத்துள்ள இந்த இடைவெளியால், மீண்டும் முதலிலிருந்து துவங்க வேண்டியது அவசியமாகிறது என்றும் அவர் கவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து, இந்த உலக கோப்பை போட்டிகளை எதிர்கொள்வது கடினமானதாக மாறியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
சர்வதேச அளவில் அனைத்து போட்டிகளும் ஒத்தி அல்லது ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், இந்தியாவில் நடைபெற திட்டமிடப்பட்டுள்ள அன்டர் -17 மகளிர் உலக கோப்பை போட்டிகளின் நிலைகுறித்து பிபா எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.