மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் பிரிவு சுற்று ஆட்டங்களில் அணிகளின் இரண்டாவது ஆட்டம் துவங்கியுள்ளது. இதில் பி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் ரொனால்டோ அடித்த ஒரு கோலால் போர்ச்சுகல் 1-0 என மொராக்கோவை வென்றது. இரண்டு தோல்விகளை அடுத்து மொராக்கோ முதல் சுற்றிலேயே வெளியேறுகிறது.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.
இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வருகின்றன. 32 அணிகளும் தலா 4 அணிகள் என 8 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தனது பிரிவில் உள்ள மற்ற மூன்று அணிகளுடன் விளையாடும்.
அதன்படி ஒவ்வொரு அணியும் ஒரு ஆட்டத்தை விளையாடியுள்ளன. பி பிரிவில் இன்று நடந்த ஆட்டத்தில் மொராக்கோவை 1-0 என போர்ச்சுகல் வென்றது.
----
பிரிவு பி
போர்ச்சுகல் - மொராக்கோ
1 - 0
----
பி பிரிவில் இதுவரை...
* ஈரான் 1-0 என மொராக்கோவை வென்றது
* போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் ஆட்டம் 3-3 என டிராவானது.
* போர்ச்சுகல் 1-0 என மொராக்கோவை வென்றது.
பி பிரிவின் புள்ளிப் பட்டியலில் போர்ச்சுகல் 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. ஈரான் 3 புள்ளிகளுடன் உள்ளது. ஸ்பெயின் 1 புள்ளியை பெற்றுள்ளது. இரண்டு தோல்விகளுடன் மொராக்கோ முதல் சுற்றிலேயே வெளியேறுகிறது.
-----
பி பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் மொராக்கோ சேம் சைடு கோல் அடிக்க 1-0 என ஈரான் வென்றது. அந்த ஆட்டத்தில் அனைத்து விதத்திலும் ஈரானை விட மொராக்கோ முன்னிலையில் இருந்தது. டிராவில் முடியும் என்று நினைக்கப்பட்ட நிலையில், ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் மொராக்கோவின் போஹாதூஸ் சேம் சைட் கோலடிக்க, ஈரான் வென்றது. உலகக் கோப்பையில் ஈரானுக்கு கிடைத்த இரண்டாவது வெற்றி இதுவாகும்.
பி பிரிவில் நடந்த இரண்டாவது ஆட்டத்தில் ஸ்பெயினுடன் கிறிஸ்டியானோ ரொனால்டோ மோதினார் என்று கூறும் அளவுக்கு தனி ஆளாக போர்ச்சுகல் அணியை தூக்கிப் பிடித்தார் ரொனால்டோ. இந்த உலகக் கோப்பையின் மிகவும் முக்கியமான ஆட்டங்களில் ஒன்றாக கருதப்படும் அந்த ஆட்டத்தின் ரொனால்டோ ஹாட்ரிக் கோலடித்தார். ஸ்பெயினுடன் 3-3 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் டிரா செய்தது.
போர்ச்சுகல் மற்றும் மொராக்கோ அணிகள் தங்களுடைய இரண்டாவது ஆட்டத்தில் இன்று விளையாடின. இதிலும் ரொனால்டோ தனி ஆளாக அசத்தினார். ஆட்டத்தின் 4வது நிமிடத்திலேயே அற்புதமாக கோலடித்து, போர்ச்சுகல் அணிக்கு முன்னிலை பெற்றுத் தந்தார்.
ஆனால், இந்த ஆட்டத்தில் மொராக்கோ அணியின் ஆதிக்கமே அதிகமாக இருந்தது. ஆட்டத்தின் 57 சதவீத நேரம் பந்து அந்த அணியிடமே இருந்தது.
இறுதியில் 1-0 என போர்ச்சுகல் வென்றது. இதன் மூலம் புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளைப் பெற்று முதலிடத்தைப் பிடித்துள்ளது. இரண்டாவது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு போர்ச்சுகலுக்கு அதிகமாக உள்ளது. ஏற்கனவே 3 புள்ளிகளைப் பெற்றுள்ள ஈரான் அடுத்ததாக ஸ்பெயினை சந்திக்கிறது. இரண்டு ஆட்டங்களிலும் தோல்வி அடைந்த மொராக்கோ அணி பிரிவு சுற்றுடன் வெளியேறுகிறது. இந்த உலகக் கோப்பையி்ல் வெளியேறும் முதல் அணி மொராக்கோ.