கீவ்: ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டியின் பைனல்ஸ் இன்று நள்ளிரவு நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான ரியல் மாட்ரிட் அணியும், லிவர்பூல் அணியும் மோதுகின்றன.
ஐரோப்பிய நாடுகளில் கால்பந்து மிகவும் பிரபலம். இதில் பல்வேறு கிளப் அணிகள் பங்கேற்கின்றன. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டிகள் நடந்து வருகின்றன. குரூப் பிரிவுகளில் 32 அணிகள் பங்கேற்றன. இதன் பைனல்ஸ் இந்திய நேரப்படி, சனிக்கிழமை நள்ளிரவு 12.15க்கு கீவ் நகரில் நடக்கிறது. இதில் நடப்பு சாம்பியனான ரியல் மேட்ரிட் அணியும், முன்னாள் சாம்பியனான லிவர்பூல் அணியும் மோதுகின்றன.
இதுவரை 15 முறை பைனல்ஸ் நுழைந்து 12 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது ரியல் மேட்ரிட். கடந்த இரண்டு சீசன்களிலும் சாம்பியன் பட்டத்தை வென்ற அந்த அணி ஹாட்ரிக் பட்டத்தை வெல்வதற்கு தயாராக உள்ளது.
அதே நேரத்தில் லிவர்பூல் அணி கடைசியாக, 2007ல் ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியின் பைனல்சில் விளையாடியது. அதில் ஏசி மிலன் அணியிடம் தோல்வியடைந்தது. அதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன் ஏசி மிலன் அணியை வென்று கோப்பையை வென்றது. எட்டாவது முறையாக இந்தப் போட்டியின் பைனல்ஸ்க்கு லிவர்பூல் முன்னேறியுள்ளது. 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில் நடந்த சூப்பர்கோபா டி எஸ்பனா, ஐரோப்பிய கால்பந்து சங்கத்தின் சூப்பர் கோப்பையை ரியல் மாட்ரிட் வென்றுள்ளது. மேலும் பிபாவின் கிளப்களுக்கான உலகக் கோப்பையையும் வென்றது. லா லிகாவில் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அதே நேரத்தில் லிவர்பூல் இந்த ஆண்டு இதுவரை எந்த கோப்பையையும் வெல்லவில்லை.
நாளை இரவு நடக்கும் ஆட்டம் ரியல் மேட்ரிட் அணியின் கிறிஸ்டியானோ ரொனால்டோ மற்றும் லிவர்பூலின் மொகம்மது சாலாஹ் இடையேயான ஆட்டமாக அமைய உள்ளது.