அட்டாக் செய்த பிரேசில்
ஆட்டம் தொடங்கிய சில நிமிடங்களில் பிரேசில் அணிக்கு கார்னர் வாய்ப்பு கிடைத்தது. இதனால் கார்னரில் இருந்து நேராக கோல் அடிக்க நட்சத்திர வீரர் நெய்மார் முயற்சிக்க, ஆட்டம் பரபரப்பாகியது. தொடர்ந்து வினிஷியஸ் ஜூனியரும் அடுத்த சில நிமிடங்களில் கோல் போட முயற்சிக்க, ஆட்டம் முழுக்க முழுக்க பிரேசில் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் தடுப்பாட்டத்தில் திறமை வாய்ந்த செர்பிய அணி, பிரேசில் வீரர்களின் முயற்சியை தடுத்து நிறுத்தியது.
முதல் பாதி சாபம்
25 நிமிடங்களுக்கு பின் பிரேசில் அணி வீரர்கள் பாக்ஸ் பக்கத்தில் வராமலேயே கோல் அடிக்க முயற்சிக்க, அதுவும் பலனளிக்கவில்லை. எந்த பக்கம் இருந்தாலும், ஏதாவது ஒரு கேப்பில் பந்தை பிரேசில் வீரர்கள் கடத்திக் கொண்டே இருந்தனர். இருந்தும் செர்பிய அணியின் சிறப்பான தடுப்பாட்டத்தால் முதல் பாதியில் கோல்கள் எதுவும் விழவில்லை. நேற்று நடைபெற்ற 4 போட்டிகளிலுமே முதல் பாதியில் எந்த கோலும் அடிக்கப்படவில்லை.
முதல் கோல்
இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாதி ஆட்டத்தை பிரேசில் அணி இன்னும் தீவிரமாக தொடங்கியது. தொடக்கத்திலேயே அலெக்ஸ் சான்ரோ அடித்த பந்து, கோல் போஸ்ட்டில் அடித்து வெளியே சென்றது. தொடர்ந்து நட்சத்திர வீரர் நெய்மாரின் சிறப்பான முயற்சியால் கொண்டு வந்த பந்தை, ரிச்சர்லிசன் சிறப்பாக கோலாக மாற்றினார். இதன் மூலம் பிரேசில் அணி முதல் கோலை அடித்து முன்னிலை பெற்றது.
பை சைக்கிள் கிக்
இதன் பின்னர் 73வது நிமிடத்தில் வினிசியஸ் ஜூனியர் கொடுத்த கிராஸை, ரிச்சர்லிசன் பை சைக்கிள் கிக் மூலம் கோல் அடித்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக அமைந்தது. இதுவரை இந்த உலகக்கோப்பைத் தொடரில் அடிக்கப்பட்ட கோல்களிலேயே, சிறந்த கோல் இது என்று தாராளமான சொல்லும் அளவிற்கு அடிக்கப்பட்டது.
பிரேசில் அபார வெற்றி
இரண்டாவது கோலை அடித்த பின்னரே, பிரேசில் வீரர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றனர். இதன்பின்னர், பிரேசில் வீரர்களின் தாக்குதலை தடுப்பதே செர்பிய வீரர்களுக்கு பெரிய வேலையாக மாறியது. இறுதியாக பிரேசில் அணி 2-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றிபெற்றது. இதனை மைதானத்தில் இருந்த பிரேசில் ரசிகர்கள் ஆர்ப்பரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.