டெல்லி: ஒரே கல்லுல ரெண்டு மாங்காய் அடிக்க முடியுமா? ஏன் முடியாது என்கிறார் பிரேசில் கால்பந்து வீரரான ரொனால்டினோ. ஒரே நேரத்தில் இரண்டு காதலிகளையும் அவர் மணக்க உள்ளார்.
பிரேசில் நாட்டு கால்பந்து அணிக்காக விளையாடியவர் உலகப் புகழ்பெற்ற ரொனால்டினோ. 38 வயதாகும் ரொனால்டினோ, பிரேசில் அணிக்காக 97 சர்வதேசப் போட்டிகளில் 33 கோல்களை அடித்துள்ளார். இரண்டு முறை உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியுள்ளார். 2002ல் பிரேசில் உலகக் கோப்பையை வெல்வதற்கு முக்கிய பங்காற்றினார்.
பிபாவின் மிகச் சிறந்த வீரர் விருது உள்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார். புகழ்பெற்ற ஜெர்மியோ, பிஎஸ்ஜி, பார்சிலோனா கிளப் அணிகளுக்காகவும் விளையாடியுள்ளார். கிளப் அணிகளுக்காக 441 போட்டிகளில் விளையாடியுள்ள அவர், 167 கோல்களையும் அடித்துள்ளார்.
இதெல்லாம் கால்பந்தில் அவருடைய சிறப்பைக் காட்டும் புள்ளி விபரங்கள். ஆனால், தனிப்பட்ட வாழ்க்கையில், மிகப் பெரிய மச்சக்காரராகவே அவர் உள்ளார்.
பிரிசிலா கோயல்ஹோ மற்றும் பீட்ரிஸ் சௌசா ஆகிய இரண்டு பேரை அவர் காதலித்து வந்தார். சௌசாவுடன் 2016ல் இருந்து பழகத் தொடங்கினார். ஆனால் அதற்கு முன்பே கோயல்ஹோவுடன் பழகி வந்தார்.
இருவருடனான நட்பையும் ஒரே நேரத்தில் சமாளித்து தொடர்ந்து வந்துள்ளார். கடந்தாண்டு ஜனவரியில், தன்னுடைய காதலை இருவரிடம் கூறியுள்ளார். இருவருடனும் மோதிரம் மாற்றிக் கொண்டார். ரியோடிஜெனிரோவில் உள்ள தனது வீட்டில் இரண்டு காதலிகளுடன் கடந்தாண்டு டிசம்பரில் குடியேறினார்.
வரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்து கொள்ளப் போவதாக ரொனால்டினோ கூறியிருந்தார். இவர்களில் யாரை அவர் திருமணம் செய்வார் என்று பட்டிமன்றம் நடந்து வந்தது. ஆனால் இருவரையுமே அவர் திருமணம் செய்யப் போவதாக தற்போது செய்திகள் வந்துள்ளன. இருவருக்கும் ஒரே மாதிரியான பரிசுப் பொருட்களை வாங்கி குவித்து வருகிறார்.