டெல்லி: உலகின் தலைச் சிறந்த வீரர்களில் ஒருவரான போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, 9 ஆண்டுகளாக விளையாடி வந்த ரியல் மாட்ரிட் அணியில் இருந்து விலகுகிறார். ஜூவன்டஸ் அணிக்கு செல்கிறார். இதற்காக ரூ.850 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
ஐரோப்பிய கால்பந்து கிளப் அணிகள் இடையே வீரர்களை மாற்றிக் கொள்ளும் டிரான்ஸ்பர் தற்போது நடந்து வருகிறது. ஒரு அணிக்காக விளையாடிய வீரரை மற்றொரு அணி அதிக விலை கொடுத்து வாங்கி வருகின்றன. அடுத்த சீசனுக்கு தயாராகும் வகையில், கிளப் அணிகள் கோடிக் கணக்கில் கொட்டிக் கொடுத்து வீரர்கலை வாங்கி வருகின்றன.
இந்த நிலையில், உலகின் தலைச் சிறந்த கால்பந்து வீரர்களில் ஒருவரான போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டியானோ ரொனால்டோ, இத்தாலியைச் சேர்ந்த ஜூவன்டஸ் அணிக்கு செல்கிறார். இதற்காக ரூ.850 கோடி மதிப்புள்ள ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காக விளையாடி வந்த ரொனால்டோ, ஸ்பெயினைச் சேர்ந்த ரியல் மாட்ரிட் அணிக்காக, 2009ல் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அப்போது உலகின் காஸ்ட்லியான வீர்ர் என்ற பெருமை அவருக்கு ஏற்பட்டது.
ரியல் மாட்ரிட் அணிக்காக, கடந்த 9 ஆண்டுகளில் 438 போட்டிகளில் விளையாடி, அதில் 451 கோல்கள் அடுத்துள்ளார். 4 முறை தங்கப் பந்து, 2 முறை ஃபிபா விருது, 3 முறை தங்க ஷூ உள்பட பல விருதுகளை அவர் வென்றுள்ளார்.
ரியல் மாட்ரிட் அணியின் 4 ஐரோப்பிய கோப்பை உள்பட 16 பட்டங்களை வென்றது. அதில் ரொனால்டோவின் பங்கு மிகப் பெரியது. ஒவ்வொரு சீசனிலும் 50க்கும் மேற்பட்ட கோல்களை அடித்த சாதனையை 8 முறை புரிந்துள்ளார்.