94வது போட்டி
ஐஎஸ்எல் 2020 -21 தொடரின் 94வது போட்டி நேற்றைய தினம் படோர்டா மைதானத்தில் ஏடிகே மோஹுன் பகன் மற்றும் ஜாம்ஷெட்பூர் எப்சி அணிகளுக்கிடையில் நடைபெற்றது. இந்த போட்டியின் இரண்டாவது பகுதியில் ராய் கிருஷ்ணா அடித்த அதிரடி கோலையடுத்து ஏடிகே மோஹுன் பகன் அணி வெற்றி கொண்டுள்ளது.
85வது நிமிடத்தில் கோல்
முதல் பகுதியில் இரு அணிகளும் கோல் எதையும் எடுக்காத நிலையில் மோஹுன் பகன் அணியின் ராய் கிருஷ்ணா பிற்பகுதியில் 85வது நிமிடத்தில் அதிரடி கோலை அடித்து அணியை முன்னிலை படுத்தினார். இதையடுத்து 1க்கு 0 என்ற கணக்கில் போட்டியில் மோஹுன் பகன் அணி வெற்றி கொண்டுள்ளது.
2வது இடத்தில் மும்பை சிட்டி
மேலும் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் மும்பை சிட்டி எப்சியை பின்னுக்கு தள்ளிவிட்டு ஏடிகே மோஹுன் பகன் அணி முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. தொடர்ந்து முன்னிலை வகித்து வந்த மும்பை சிட்டி எப்சி இதன்மூலம் இரண்டாவது இடத்தில் பின்தங்கியுள்ளது. இன்று மும்பை சிட்டி எப்சி, பெங்களூரு எப்சியுடன் மோதவுள்ள நிலையில், இந்த நிலை மாற வாய்ப்புள்ளது.
பலிக்காத கோச்சின் முயற்சிகள்
போட்டியின் முதல் பகுதியில் இரு அணிகளும் தடுத்து ஆடிக் கொண்டிருந்தது. தொடர்ந்து மோஹுன் பகன் அணியின் அடுத்த கோல் அடிக்கும் வாய்ப்பை ஜாம்ஷெட்பூர் கீப்பர் சிறப்பாக தடுத்தார். இதனிடையே ஜாம்ஷெட்பூர் கோச் ஓவன் கோய்ல், நெரிஜூஸ் வால்கிஸ் மூலமாக கோல் அடிக்க மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியில் முடிந்தது. இந்த போட்டியில் தோல்வியுற்றதன்மூலம் ஜாம்ஷெட்பூரின் ப்ளே-ஆப் கனவு தகர்ந்துள்ளது.