மாஸ்கோ: ஃபிபா உலகக் கோப்பையை நடத்தும் பொறுப்பை இன்று நடந்த நிகழ்ச்சியில் கத்தாரிடம் ஒப்படைத்தது ரஷ்யா.
21-வது ஃபிபா உலகக் கோப்பை போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. கடந்த ஒரு மாதமாக நடக்கும் உலகக் கோப்பையில், இன்று இரவு நடக்கும் பைனலில் பிரான்ஸ் மற்றும் குரேஷியா மோத உள்ளன.
பரபரப்பான போட்டி துவங்குவதற்கு முன்பாக, 2022ல் நடக்கும் அடுத்த உலகக் கோப்பை போட்டியை நடத்தும் பொறுப்பை கத்தாரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், கால்பந்து ஒன்றை கத்தாரின் எமிர் ஷேக் தமிம் பின் ஹமாத் அல்-தானியிடம் வழங்கி பொறுப்பை ஒப்படைத்தார். ஃபிபா தலைவர் கியானி இன்பான்டினே இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதன் மூலம் வளைகுடா நாடு ஒன்று முதல் முறையாக உலகக் கோப்பையை நடத்த உள்ளது.
போட்டியை நடத்துவதற்கான முழு ஏற்பாடுகளை கத்தார் அணி இனி மேற்கொள்ளும். 2022ல் நவம்பர் மற்றும் டிசம்பரில் போட்டிகள் நடக்க உள்ளன. 32 நாடுகள் பங்கேற்க உள்ளன. 48 நாடுகள் பங்கேற்பது குறித்து ஃபிபா ஆராய்ந்து வருகிறது.