ஈஸ்ட் பெங்கால் -மும்பை சிட்டி மோதல்
ஐஎஸ்எல் 2020-21 தொடர் கோவாவின் பல மைதானங்களில் நடைபெற்று வருகிறது. இதன் 13வது போட்டி நேற்றைய தினம் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் மற்றும் மும்பை சிட்டி அணிகளுக்கிடையில் பேம்போலிமின் ஜவஹர்லால் மைதானத்தில நடைபெற்றது.
மும்பை சிட்டி வெற்றி
இதில் 3க்கு 0 என்ற கணக்கில் எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணியை மும்பை சிட்டி எப்சி அணி வெற்றி கொண்டுள்ளது. இதன்மூலம் தனது நேரடியான இரண்டாவது வெற்றியை பெற்று முதலிடத்திற்கு அந்த அணி முன்னேறியுள்ளது. இதனிடையே தொடர்ந்து இரண்டாவது தோல்வி மூலம் புள்ளிகள் பட்டியலில் இறுதி இடத்திலேயே எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணி உள்ளது.
கோச் ராபி பௌலர் கருத்து
இந்நிலையில் தங்களது அணியில் உள்ள இந்திய வீரர்கள் யாருக்கும் இதுவரை பயிற்சி என்பதே அளிக்கப்படாதது போல உள்ளது என்று எஸ்சி ஈஸ்ட் பெங்கால் அணியின் பயிற்சியாளர் ராபி பௌலர் தெரிவித்துள்ளார். அவர்களுக்கு சிறப்பான பயிற்சியளித்து திறம்பட விளையாட வைப்பதே தனது முதல் வேலை என்றும் குறிப்பிட்டுள்ளார்.
பாடம் கற்றுக்கொடுத்த தோல்வி
நேற்றைய தோல்வி தன்னை வெகுவாக பாதித்துள்ளதாகவும் தன்னுடைய அணி வீரர்களும் இதே மனநிலையுடன்தான் உள்ளதாகவும் குறிப்பிட்ட பௌலர், தாங்கள் இந்த தொடருக்கு புதிது என்றாலும் போட்டியில் நடைபெற்ற சிறிய அளவிலான தவறுகளை திருத்திக்கொண்டு சிறப்பாக விளையாடுவோம் என்றும் அவர் கூறினார்.