ரோஸ்டோவ் ஆன் டான்: மெக்சிகோ - தென் கொரியா இடையிலான ஆட்டத்தில் மெக்சிகோ அணி 2-1 கோல் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
தென் கொரிய அணி முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்டதால் நான்கு முறை மஞ்சள் அட்டை காட்டப்பட்டது. மெக்சிகோ - தென் கொரியா இடையிலான இப்போட்டியில் 25வது நிமிடத்தில் வெலா தனது அணிக்கான முதல் கோலைப் போட்டார். முதல் பாதியில் மெக்சிகோவால் ஒருகோல் மட்டுமே அடிக்க முடிந்தது. 2வது பாதியிலும் தென் கொரியா தடுப்பாட்டத்திலேயே ஈடுபட்டது.
ஆனால் மெக்சிகோ அணியினர் அதி தீவிரமாக கோலடிக்கும் முயற்சிகளில் குதித்தனர். அதற்கு 65வது நிமிடத்தில் பலன் கிடைத்தது. ஹிர்விங் லோஸானோ எடுத்துக் கொடுத்த பந்தை அழகாக கோலாக்கினார் சிக்காரிட்டோ. அதன் பிறகு கடைசி வரை இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. தென் கொரியாவின் தரப்பில் முரட்டு ஆட்டத்தில் ஈடுபட்ட கிம் யங் குவான், லீ யாங், லீ சோங் வூ, ஜுங் வூ யங், சன் ஹூங் மின் ஆகியோருக்கு மஞ்சள் அட்டை காட்டப்பட்டது.
தென் கொரியா கடைசி நேரத்தில் ஒரு கோலடித்தது. 2வது பாதி ஆட்டத்தின் இறுதியில் 92வது நிமிடத்தில் தென் கொரியாவின் சன் ஹூங் மின் ஒரு கோலடித்தார். இந்த வெற்றி மூலம் அடுத்த சுற்றுக்கு மெக்சிகோ தகுதி பெற்றது.
புள்ளிப் பட்டியலில் ஸ்வீடன் மற்றும் மெக்சிகோ தலா 3 புள்ளிகளுடன் இருந்தன. ஜெர்மனி, தென்கொரியா புள்ளிகள் ஏதும் இல்லாமல் உள்ளன. எப் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் வென்று அதிர்ச்சியை ஏற்படுத்தியது மெக்சிகோ. இரண்டாவது ஆட்டத்தில் ஸ்வீடன் 1-0 என தென்கொரியாவை வென்றது.
உலகக் கோப்பையில் 14 அல்லது அதற்கு மேற்பட்ட முறை விளையாடியுள்ள 8 அணிகளில், கோப்பையை வெல்லாத ஒரே அணி மெக்சிகோ. 1986 முதல் தொடர்ந்து உலகக் கோப்பையில் தென் கொரியா விளையாடுகிறது. மேலும் 10வது முறையாக உலகக் கோப்பையில் விளையாடுகிறது. இந்த சாதனையை இதுவரை எந்த ஆசிய அணியும் செய்ததில்லை.