மேற்கு வங்கம், ஜல்பாய்குரியில் உள்ள நேதாஜி வித்யாபத் மைதானத்தில் நேற்று உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றது. இதில் தோரல்பாரா, பானு நகர் அணிகள் மோதின.
விறுவிறுப்பான இப்போட்டியில் தோரல்பாரா அணியின் வீரர் மகேஷ் தபா(24), பந்தை விரைவாக கடத்தி சென்று கோல் அடிக்கும் முயற்சியி்ல் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராத வகையில், பானு நகர் கோல் கீப்பரின் முழங்கால், தபாவின் நெஞ்சில் பலமாக தாக்கியது.
இதில் தபா காயமடைந்து நெஞ்சை பிடித்து கொண்டு சுருண்டு விழுந்தார். இதனையடுத்து தபாவை உடனடியாக மருத்துவமனையில் சேர்க்க ஆம்பிலன்ஸ் வசதியின்றி, மோட்டார் சைக்கிள் மூலம் அருகில் உள்ள அரசு மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். ஆனால் அங்கு அவசர சிகிச்சைக்கான படுக்கை வசதி குறைவாக இருந்தது. இதனால் அங்கு தபாவை அனுமதிக்க மறுக்கப்பட்டது.
இதன்பிறகு அருகில் உள்ள மற்றொரு தனியார் நர்சிங் ஹோமிற்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் அங்கேயும் தபாவிற்கு சிகிச்சை அளிக்க இடம் கிடைக்கவில்லை. அங்கிருந்து மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு தபா அழைத்து செல்லப்பட்டார். ஆனால் அவரை பரிசோதித்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.
சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் விதிமுறைகளின்படி, போட்டி நடைபெறும் மைதானத்தில் டாக்டர் உட்பட மருத்துவக் குழு கொண்ட ஆம்புலன்ஸ் எப்போதும் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆனால் சம்பவம் நடைபெற்ற இந்த மைதானத்தில் மருத்துவ வசதிகள் எதுவும் இருக்கவில்லை.
மகேஷ் தபாவிற்கு எந்த தவறான பழக்கங்களும் இல்லை என்று அவரது உறவினர் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் பிரேத பரிசோதனை அறிக்கை கிடைத்த பிறகே, இறப்பிற்கான காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியின் மகனான மகேஷ் தபா, ஜல்பாய்குரி மாவட்டத்தில் கால்பந்து வீரர்களில் மிகவும் பிரபலமானவர். இதனால் அவரது இறப்பு கால்பந்து ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்தியாவில் உள்ள கால்பந்து மைதானங்களில் வீரர் ஒருவர் இறப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்பாக பல சம்பவங்கள் மருத்துவ வசதியில் ஏற்பட்ட குறைப்பாடு காரணமாக நிகழ்ந்துள்ளது.
கடந்த 2004ம் ஆண்டு பெங்களூரில் நடைபெற்ற பெடரேஷன் கோப்பைக்கான போட்டியில், டெம்போ வீரர் கிறிஸ்டியானோ ஜூனியர், மோகன் பகான் கோல் கீப்பருடன் மோதி மயங்கி விழுந்து மரணம் அடைந்தார்.
அதேபோல கடந்த ஆண்டு இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் அணியின் கோல் கீப்பர் அருண் குமார்(24) ஆடுகளத்திலேயே மாரடைப்பு ஏற்பட்டு பலியானார். கடந்த மார்ச்சில் செளத் வெஸ்டர்ன் ரயில்வே அணிக்கு எதிரான போட்டியில், பெங்களூர் மார்ஷ் ஸ்டிரைக்கர் வீரர் வெங்கடேஷ்(25), மைதானத்தில் மயங்கி விழுந்தார். அவருக்கு உடனடியாக ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் பலியானார்.
விளையாட்டு மைதானங்களில் தகுந்த மருத்துவ சிகிச்சைக்கான வசதிகள் இல்லாமல், சிறந்த வீரர்கள் இறப்பதை தடுக்க, இந்திய விளையாட்டு வாரியம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.