பாஸல்: யூரோ கோப்பை கால்பந்துப் போட்டியின் இறுதிப் போட்டிக்குள் நுழைந்தது ஜெர்மனி. எக்ஸ்ட்ரா டைமில் ஜெர்மனி வீரர் பிலிப் லேம் அடித்த கோல் துருக்கியின் கனவுகளைத் தகர்த்து விட்டது. ஆட்டம் முடிய 4 நிமிடங்கள் இருந்தபோது ஜெர்மனி 2-1 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. வெற்றி நிச்சயம் எனும் நிலையில் துருக்கியின் செமியா சென்டர்க் அடித்த கோல் 2-2 என்ற சமநிலையை ஏற்படுத்தி ஜெர்மனி வீரர்களுக்குப் புளியைக் கரைத்தது. பின்னர் வழங்கப்பட்ட எக்ஸ்ட்ரா டைமை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட லேம் லாவகமாக கோல் அடித்து ஜெர்மனியை இறுதிப் போட்டிக்கு இட்டுச் சென்றார். மூன்று முறை இந்தக் கோப்பையை வென்றுள்ளது ஜெர்மனி. தற்போது ஆறாவது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைகிறது. இன்று நடக்கும் மற்றொரு அரை இறுதியில் ஸ்பெயினைச் சந்திக்கிறது ரஷ்யா. ஞாயிற்றுக்கிழமை வியன்னாவில் இறுதிப்போட்டி நடக்கிறது.