மெஸ்ஸி விலகல்
அர்ஜெண்டினாவின் (Argentina) நட்சத்திரக் கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி (Lionel Messi), பார்சலோனா (Barcelona) கால்பந்து அணிக்காக ஆடி வந்தார். அந்த கால்பந்து அணியுடன் மெஸ்ஸி போட்டிருந்த ஒப்பந்தம் கடந்த ஜூலை மாதத்துடன் நிறைவு பெற்றது. இதனையடுத்து அடுத்த 5 ஆண்டுகளுக்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர். ஆனால் அது தற்போது நிறைவேறாது என தெரியவந்துள்ளது.
என்ன காரணம்
பார்சிலோனா அணியுடனான ஒப்பந்தத்தில் மெஸ்ஸி கையெழுத்திடவில்லை. அவர் இனி பார்சிலோனா அணிகாக விளையாட்டமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளது அந்த அணி நிர்வாகம். பார்சிலோனா மற்றும் மெஸ்ஸி இடையே நிதி மற்றும் கட்டமைப்பு தடைகள் காரணமாக புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை எனக்கூறப்படுகிறது.
21 ஆண்டுகால பயணம்
கடந்த 2000 ஆம் ஆண்டு இளம் வீரராக பார்சிலோனா அணியில் இணைந்தவர் லியோனல் மெஸ்ஸி. அதாவது அவரின் 13 வயது முதல் அந்த அணிக்காக விளையாடி வந்தார். இந்நிலையில் தற்போது 21 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த அணியில் இருந்து வெளியேறியுள்ளார்.
சாதனை
அக்குழுவுக்காக, ஆக அதிகமான போட்டிகளில் விளையாடி, ஆக அதிகமான கோல்கள் அடித்த வீரர் என்ற பெருமை மெஸ்ஸியை சார்ந்துள்ளது. இதுவரை பார்சிலோனாவுக்காக 778 ஆட்டங்களில் விளையாடியுள்ள மெஸ்ஸி, 672 கோல்களை அடித்துள்ளார். தனிப்பட்ட கிளப் அணிக்காக பீலே அடித்த 643 கோல் என்ற சாதனையை முறியடித்து மெஸ்ஸி புதிய சாதனை படைத்தார். அந்த அணிக்காக 34 டிராபிகளையும் பெற்றுத் தந்துள்ளார்.
புதிய ஒப்பந்தம்?
பார்சிலோனா அணியில் இருந்து வெளியேறியிருந்தாலும், மெஸ்ஸி இன்னும் வேறு எந்த கிளப்புடனும் ஒப்பந்தம் குறித்து பெரிய அளவில் பேச்சுவார்த்தை நடத்தவில்லை எனத்தெரிகிறது. எனவே தற்போதைக்கு அவர் எந்த அணியை சேர்ந்தவரும் இல்லை. விரைவில் அவரது புதிய ஒப்பந்தம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.