மும்பை: இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தியது. 100வது போட்டியில் விளையாடிய கேப்டன் சுனில் சேத்ரி 2 கோல்களை அடித்தார்.
இன்டர்கான்டினென்டல் கோப்பை கால்பந்து போட்டிகள் மும்பையில் நடக்கின்றன. கண்டங்களுக்கு இடையேயான இந்த போட்டியில் இந்தியா, கென்யா, நியூசிலாந்து, சீன தைபே அணிகள் பங்கேற்கின்றன.
இதன் முதல் ஆட்டத்தில் சீன தைபே அணியை 5-0 என இந்தியா வென்றது. அந்த ஆட்டத்தின்போது, உலக அளவில் விளையாடி வரும் வீரர்களில் அதிக கோல் அடித்தோர் பட்டியலில் மூன்றாவது இடத்தை, இந்திய அணியின் கேப்டன் சுனில் சேத்ரி பெற்றார்.
கென்யாவுக்கு எதிராக நேற்று நடந்த ஆட்டம் சேத்ரிக்கு 100வது போட்டியாகும். இந்திய அளவில் 100 போட்டிகளில் பங்கேற்கும் இரண்டாவது வீரரானார்.
மும்பையில் நடந்து வரும் இந்த இன்டர்கான்டினென்டல் கோப்பை போட்டிகளை பார்க்க வரும்படி ரசிகர்களுக்கு சேத்ரி அழைப்பு விடுத்திருந்தார். அவருக்கு ஆதரவாக பல விளையாட்டு பிரபலங்களும் வீடியோக்களை வெளியிட்டிருந்தனர்.
அதன்படி நேற்று இரவு நடந்த ஆட்டத்துக்கான அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்தன. ரசிகர்களின் கூட்டத்தால் மைதானம் நிரம்பி வழிந்தது.
திடீர் மழை பெய்தபோதும் ஆட்டம் தொடர்ந்தது. இதில், இந்தியா 3-0 என்ற கோல் கணக்கில் கென்யாவை வீழ்த்தியது. இதன் மூலம் பைனல் முன்னேறியது.
ஆட்டத்தின் 68 மற்றும் 91வது நிமிடங்களில் சுனில் சேத்ரி கோலடித்தார். ஜூஜே லால்பெகுலா 71வது நிமிடத்தில் கோலடித்தார்.