மாஸ்கோ: 21வது ஃபிபா உலகக் கோப்பையில் எப் பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் தென்கொரியாவுடன் ஸ்வீடன் மோத உள்ளது. இரண்டாவது சுற்றுக்கு முன்னேற எந்த அணிக்கு அதிக வாய்ப்புள்ளது என்பதை இந்த ஆட்டம் நிர்ணயிக்கும்.
21வது ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது. 2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பையிலும் பங்கேற்கின்றன.
இந்த உலகக் கோப்பைக்கான போட்டிகள் விறுவிறுப்பாக துவங்கியுள்ளன. எப் பிரிவில் நடந்த முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் ஜெர்மனியை 1-0 என்ற கோல் கணக்கில் மெக்சிகோ வென்றது. இந்தப் பிரிவில் இன்று நடக்கும் ஆட்டத்தில் தென்கொரியாவுடன் ஸ்வீடன் விளையாட உள்ளது.
----
பிரிவு எப்
ஸ்வீடன் - தென்கொரியா
போட்டி நடக்கும் நேரம் - இந்திய நேரப்படி மாலை 5.30 மணி
----
* 1986 முதல் தொடர்ந்து உலகக் கோப்பையில் தென் கொரியா விளையாடுகிறது. மேலும் 10வது முறையாக உலகக் கோப்பையில் விளையாட உள்ளது. இந்த சாதனையை இதுவரை எந்த ஆசிய அணியும் செய்ததில்லை.
* 2006ம் ஆண்டுக்குப் பிறகு மீண்டும் உலகக் கோப்பையில் விளையாட ஸ்வீடன் தகுதி பெற்றுள்ளது. ஐரோப்பிய அளவிலான தகுதிச் சுற்றில் இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
* இரு அணிகளும் முதல் முறையாக உலகக் கோப்பையில் சந்திக்க உள்ளன. மற்ற போட்டிகளில் இதுவரை விளையாடிய 4 ஆட்டங்களில் 2ல் வெற்றி, 2ல் டிராவுடன் ஸ்வீடன் முன்னிலையில் உள்ளது.
* 1958ல் ஸ்வீடன் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதன்பிறகு 1994ல் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மற்ற உலகக் கோப்பையில் இரண்டாவது சுற்றை எட்டியதில்லை.
* தென்கொரியா உலகக் கோப்பையில் கடைசியாக விளையாடிய 9 ஆட்டங்களில் ஒன்றில் மட்டுமே வென்றுள்ளது. 3ல் டிரா, 5ல் தோல்வி அடைந்துள்ளது.
------
முக்கிய வீரர்கள்
ஸ்வீடன் - மிகச் சிறப்பாக பந்தைக் கடத்திச் செல்லக் கூடிய, பந்தை பாஸ் செய்யக் கூடிய எமில் போர்ஸ்பெர்க் கவனிக்கப்பட வேண்டியவர்.
தென்கொரியா - வேகத்தில் அசத்தக் கூடியவர், பிரீமியர் லீகில் ஆசிய அளவில் அதிக கோலடித்தவரான சன் ஹியூங்க் மின். அவர் சிறப்பாக விளையாடினால், தென்கொரியா 2-வது சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பு உள்ளது.
---
ஸ்வீடனின் மிகவும் முக்கியமான முன்கள வீரரான ஜிலாடன் இப்ராஹிமோவிக், 2016ல் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். உலகக் கோப்பைக்கு அவர் திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இப்ராஹிமோவிக் இல்லாமலேயே பல போட்டிகளில் வென்றதால், அவரை அணிக்கு பரிசீலிக்கவில்லை. அவர் இல்லாத குறையை ஆந்தரியாஸ் கிரான்குவிஸ்ட் மறக்கடித்து வருகிறார்.
தற்போது ஸ்வீடன் அணி மிகவும் ஒற்றுமையாக, மீண்டும் கிடைத்த வாய்ப்பை தவறவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. ஆனால், அணியின் முக்கியமான வீரர்கள் பலர் முழுமையான பார்மில் இல்லை. கடைசியாக நடந்த சில ஆட்டங்களிலும், பயிற்சி ஆட்டங்களிலும் ஸ்வீடன் திணறியது.
உலகக் கோப்பைக்கான ஆசிய அளவிலான தகுதிச் சுற்று போட்டியில் ஏ பிரிவில் இரண்டாவது இடத்தை தென்கொரியா பெற்றது. ஆனால், தகுதிச் சுற்று ஆட்டங்களில் தடுப்பாட்டத்தில் திணறியது.
தற்போது எப் பிரிவில் நடப்பு சாம்பியன் ஜெர்மனி, மெக்சிகோவும் உள்ளன. ஒரு சிறிய தவறு செய்தாலும், தேற முடியாது. அதனால், இன்றைய ஆட்டம் ஸ்வீடன் மற்றும் தென் கொரியாவுக்கு மிகவும் முக்கியமானதாகும்.