முன்னாள் சாம்பியன்
கேப்டல் கூல் மகேந்திர சிங் டோணி, நடிகர் அபிஷேக் பச்சனின் சென்னையின் எப்சி அணி, ஏற்கனவே ஒருமுறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்த முறையும் சாம்பியன் பட்டத்தை வெல்லக் கூடிய அணியாக முதலில் இருந்தே கணிக்கப்பட்டு வருகிறது. தடுப்பாட்டமே அணியின் முக்கிய பலமாகும்.
அதிரடிதான் கொள்கை
அதே நேரத்தில், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லியின் எப்சி கோவா, அவரைப் போலவே ஆக்ரோஷமான அணி. அதிரடிதான் எங்களுடைய தடுப்பாட்டம் என்று அந்த அணியின் கோச் கூறுவதை, ஒவ்வொரு ஆட்டத்திலும் வெளிப்படுத்தியுள்ளனர்.
கோல்களில் சாதனை
எப்சி கோவா அணி, லீக் ஆட்டங்களில், 42 கோல்களை அடித்து, அதிக கோல்கள் அடித்ததில் முதலிடத்தில் உள்ளது. அதிரடிதான் தடுப்பாட்டம் என்று கூறும் அணி, தடுப்பாட்டத்தில் சோபிக்கவில்லை. 28 கோல்களை விட்டுக் கொடுத்து, அதிலும் முதலிடத்தில் உள்ளது.
சென்னைக்கு சவால்
கோல்களை விட்டுக் கொடுத்தாலும், அதை ஈடுசெய்ய கோல்களை அடித்து வருவதால், எப்சி கோவாவுடனான இந்த ஆட்டம், சென்னையின் எப்சிக்கு சவாலாகவே இருக்கும். எப்சி கோவா அடித்துள்ள, 42 கோல்களில், இரண்டு ஸ்பெயின் வீரர்கள் பங்கு 30 ஆகும். பெர்ரான் கோரோமினால் 18 கோல்களுடன் அதிக கோலடித்தவர் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மேனுவல் லான்சராட்டோ 12 கோல்களை அடித்துள்ளார்.
காத்திருக்கும் ஜீஜே
சென்னையின் எப்சியின் ஜீஜே லால்பெகுல்லா, 7 கோல்கள் அடித்து, அதிக கோலடித்த இந்தியர்கள் பட்டியலில் சுனில் சேத்ரிக்கு அடுத்த இடத்தில் உள்ளார். இந்த முறை அதிக கோலடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்ற ஏக்கத்தை அவர் இந்த ஆட்டத்தில் தீர்த்து கொள்வார் என்று எதிர்பார்க்கலாம். சமபலம் பொருந்திய அதிரடிக்கு பெயர் பெற்ற அணிகளுக்கு இடையேயான ஆட்டம் என்பதால், மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.