ரசிகர்கள் சோகம்
இதனிடையே ஸ்விட்சர்லாந்து அணிக்கு எதிரான காலிறுதிக்கு முந்தைய சுற்றான நாக் அவுட் போட்டியில் 6-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுகல் அணி அபார வெற்றியை பதிவு செய்தது. போர்ச்சுகல் அணியின் இளம் வீரர் ராமோஸ் உலகக்கோப்பைத் தொடரின் முதல் ஹாட்ரிக் கோல் அடித்து சாதனை படைத்தார். இதனால் போர்ச்சுகல் அணி ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்தாலும், கிறிஸ்டியானோ ரொனால்டோ ரசிகர்கள் மகிழ்ச்சியாக இல்லை.
ரொனால்டோவுக்கு சிக்கல்
ஏனென்றால் ஸ்விட்சர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் ரொனால்டோ களமிறங்கவில்லை. அவருக்கு பதிலாக களமிறங்கிய ராமோஸ், ஹாட்ரிக் கோல்கள் அடித்துள்ளதால், இனி ரொனால்டோ போர்ச்சுகல் அணிக்காக களமிறங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் கடைசி உலகக்கோப்பைத் தொடரில் ரொனால்டோ முழுமையாக பங்கேற்க முடியாத சூழலும் அவரது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
விமர்சனங்கள்
ஃபிஃபா உலகக்கோப்பைத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக கிறிஸ்டியானோ ரொனால்டோ இல்லாமலேயே போர்ச்சுகல் அணி பலம் வாய்ந்த அணியாக பார்க்கப்பட்டது. அந்த அணியின் பலத்தை குறைக்கும் வகையில் ரொனால்டோவின் செயல்பாடுகள் இருப்பதாகவும் விமர்சிக்கப்பட்டது. இந்த நிலையில் ரொனால்டோ அணியில் இல்லாமலேயே போர்ச்சுகல் அணி காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளது, அந்த விமர்சனங்கள் சரியென பார்க்கப்படுகிறது.
ரொனால்டோவின் தேவை
அதேபோல் மாற்று வீரராக ரொனால்டோ களமிறங்குவது போர்ச்சுகல் அணிக்கு சாதகமாக இருக்கிறது. ஏனென்றால் வாழ்வா, சாவா போட்டிகளில் அபரிதமான திறமையை வெளிப்படுத்தும் வல்லமை கொண்ட ரொனால்டோ, இரண்டாம் பாதியில் களமிறங்கும் போது போர்ச்சுகல் அணி வெற்றிபெற அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனிடையே கிறிஸ்டியானோ ரொனால்டோ, நேற்று பெஞ்சில் அமர வைக்கப்பட்டாலும், ஒவ்வொரு கோலுக்கும் மகிழ்ச்சியாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டது ரசிகர்களிடையே பாராட்டை பெற்று வருகிறது.