திருவனந்தபுரம்: உலகக் கோப்பைக் கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டைனா தோற்றுப் போனதால் அதிர்ச்சியில் கேரளாவில் ஒரு பாதிரியார் உள்பட 2 பேர் மரணமடைந்தனர்.
உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டி நேற்று நடந்தது. பரபரப்புடன் எதிர்பார்க்கப்பட்ட இந்த போட்டியில் மூன்று முறை சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனியும், இரண்டு முறை சாம்பியன் பட்டம் வென்ற அர்ஜென்டினாவும் மோதின.
கேரளாவில் கால்பந்து ரசிகர்கள் அதிகம். எனவே திருவனந்தபுரம், எர்ணாகுளம், கோழிக்கோடு உள்பட பல பகுதிகளில் பெரிய திரைகளில் கால்பந்து போட்டிகளை பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கொல்லம் அருகே பத்தனாபுரம் பகுதியை சேர்ந்தவர் ரேஞ்சு மேத்யூ. இவர் அப்பகு சர்ச்சில் பாதிரியாராக இருந்தார். இவர் தீவிர அர்ஜென்டைனா ரசிகர்.
அர்ஜென்டைனாதான் வெற்றி பெறும் என பலரிடம் பந்தயமும் கட்டியிருந்தார். இந்த நிலையில் வீட்டில் இருந்தபடி போட்டியைப் பார்த்து வந்தார். ஆனால் எதிர்பாராதவிதமாக அர்ஜென்டைனா தோற்றுப் போனது.
இதனால் அதிர்ச்சி அடைநத மேத்யூ போட்டி முடிந்த சிறிது நேரத்தில் திடீரென மயங்கி விழுந்தார். வீட்டில் உள்ளவர்கள் அவரை பத்தனாபுரம் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.
இதேபோல மலப்புரம் மாவட்டம் வண்டூர் பகுதியை சேர்ந்தவர் சிவதாசன். தொழிலாளியான இவரது வீட்டில் உலக கோப்பை கால்பந்து இறுதி போட்டியை பார்த்து கொண்டிருந்தார். தீவிர அர்ஜென்டைனா ரசிகரான இவர் ஜெர்மனி கோல் அடித்து வெற்றி பெற்றதை பார்த்து அதிர்ச்சியில் உயிரிழந்தார்.