28வது போட்டி
ஐஎஸ்எல் 2020-21 தொடரின் 28வது போட்டி இன்று நடைபெறவுள்ள நிலையில் மும்பை சிட்டி மற்றும் ஜாம்ஷெட்பூர் அணிகள் மோதவுள்ளன. 4 தொடர் வெற்றியுடன் முதலிடத்தில் உள்ள மும்பை அணியுடன் ஒரு வெற்றி மற்றும் 3 டிரா செய்துள்ள ஜாம்ஷெட்பூர் அணி விளையாடவுள்ளது.
சிறப்பாக விளையாடுவோம்
ஜாம்ஷெட்பூர் தற்போது 6 புள்ளிகளுடன் ஐஎஸ்எல் புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது. இந்நிலையில் தங்களுடைய சிறப்பான செயல்பாட்டை இந்தப் போட்டியில் வெளிப்படுத்துவோம் என்று ஜாம்ஷெட்பூர் அணியின் முக்கிய வீரர் ஜாக்கிசந்த் தெரிவித்துள்ளார்.
சொதப்பும் குழு செயல்பாடு
வழக்கமாக மற்ற சீசன்களை போலவே இந்த சீசனிலும் இவரது செயல்பாடு சிறப்பாகவே அமைந்துள்ளது. ஆயினும் குழுவாக வரும்போது ஜாம்ஷெட்பூர் வெற்றிக்காக போராடி வருகிறது. கடந்த சீசனில் எப்சி கோவா அணிக்காக விளையாடிய ஜாக்கிசந்த், தன்னுடைய சிறப்பான செயல்பாட்டின் மூலம் அந்த அணியின் வெற்றித் தருணங்களுக்கு கை கொடுத்தார்.
காத்திருக்கும் ஜாக்கிசந்த்
இந்நிலையில் வலிமையான அணிகளுடன் மோதுவது தனக்கு எப்போதும் பிடித்தமானது என்றும் அதனால் மும்பை அணியுடனான இன்றைய போட்டிக்காக காத்திருப்பதாகவும் ஜாக்கிசந்த் கூறியுள்ளார். மேலும் அணியில் புதிய வீரர்கள் இருப்பதாகவும் அவர்கள் அனைவரும் ஒருங்கிணைந்து விளையாட கால அவகாசம் தேவைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.