சென்னை:
21வது பிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் ரஷ்யாவில் நடக்கின்றன. ஜூன் 14ல் துவங்கி, ஜூலை 15 வரை நடக்கும் இந்த உலகக் கோப்பையில் 32 நாடுகள் பங்கேற்கின்றன. கோப்பையை வெல்வதற்காக அனைத்து அணிகளும் தயாராகி வருகின்றன.
2014ல் நடந்த உலகக் கோப்பையில் பங்கேற்ற நடப்பு சாம்பியன் ஜெர்மனி உள்பட 20 நாடுகள் இந்த உலகக் கோப்பைக்கு தகுதி பெற்றுள்ளன. பல்வேறு நிலைகளில் நடத்தப்பட்ட தகுதிச் சுற்று ஆட்டங்களில் வென்று, 31 அணிகள் உலகக் கோப்பைக்கு நுழைந்துள்ளன. போட்டியை நடத்துவதால் ரஷ்யா நேரடியாக தகுதி பெற்றுள்ளது.
ஜெர்மனி அல்லது பிரேசில் இந்த உலகக் கோப்பையை வெல்லும் அணிகளாக கருதப்படுகின்றன. அதே நேரத்தில் அர்ஜென்டீனா, ஸ்பெயின், பெல்ஜியம் போன்ற அணிகளுக்கும் வாய்ப்பு உள்ளதாகக் கருதப்படுகிறது.
இந்த உலகக் கோப்பையில் பங்கேற்கும் அணிகளின் பலம், பலவீனம் குறித்து மைகேல் தமிழ் விரிவாக அலசுகிறது.
நாடு : மெக்சிகோ
எப் பிரிவில் தென்கொரியா, ஸ்வீடன், ஜெர்மனியுடன் இடம் பெற்றுள்ளது.
லீக் சுற்று ஆட்டங்கள் :
ஜூன் 17ல் ஜெர்மனி
ஜூன் 23ல் தென்கொரியா
ஜூன் 27ல் ஸ்வீடன்
பிபா தரவரிசை : 15
கடந்த உலகக் கோப்பையில் : காலிறுதிக்கு முந்தையச் சுற்றில் வெளியேறியது
உலகக் கோப்பையில் சிறந்த இடம் : 1970, 1986ல் காலிறுதிச் சுற்று
முக்கிய வீரர்கள் : ஜேவியர் ஹர்மான்டஸ், ஜீசஸ் கொரோனா, ஹிர்விங் லோசானோ, ஜொனாத்தன் டாஸ் சான்டஸ்
கோச் : ஜூவான் கார்லோஸ் ஒசோரியோ
இதுவரை 15 உலகக் கோப்பைகளில் விளையாடியுள்ள மெக்சிகோ, ஒருமுறைகூட காலிறுதியை தாண்டவில்லை. 1970 மற்றும் 1986ல் காலிறுதியில் விளையாடியுள்ளது.
1994க்குப் பிறகு தொடர்ந்து உலகக் கோப்பைக்கு தகுதிபெற்றுள்ள 6 நாடுகளில் ஒன்றாக விளங்கும் மெக்சிகோ அணி, 32 ஆண்டுகளுக்குப் பிறகு காலிறுதியைத் தாண்ட வேண்டும் என்ற உறுதியுடன் உள்ளது.
பல்வேறு கிளப் அணிகளுக்கு பயிற்சி அளித்த நீண்ட அனுபவம் உள்ள ஒசோரியோ, 2015ல் மெக்சிகோ கோச்சானார். அதன்பிறகு, மெக்சிகோ சர்வதேசப் போட்டிகளில் அசத்தி வருகிறது.
அவர் பயிற்சி அளித்து விளையாடியுள்ள 45 ஆட்டங்களில் 7ல் மட்டுமே மெக்சிகோ தோல்வியடைந்துள்ளது. இந்த உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றி போட்டியிலும் மேலும் 3 ஆட்டங்கள் இருக்கையிலேயே மெக்சிகோ தகுதி பெற்றுள்ளது.
இந்த முறை, பிரிவு சுற்று ஆட்டங்களில் வென்று, காலிறுதிக்கு முந்தையச் சுற்றுக்கு முன்னேறுவதற்கு மெக்சிகோவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. நடப்பு சாம்பியன் ஜெர்மனி இதே பிரிவில் உள்ளது.
அதனால், புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்தை மெக்சிகோ பிடித்தால், இ பிரிவில் முதலிடம் பிடிக்கும் அணியுடன் அடுத்த நாக் அவுட் சுற்றில் விளையாட வேண்டும். கண்டிப்பாக அந்தப் பிரிவில் பிரேசில் தான் முதலிடம் பிடிக்கும். அதை வெல்வதுதான் மெக்சிகோவுக்கு தற்போது உள்ள மிகப் பெரிய சவாலாக இருக்கும்.
முதலில் கால் இறுதியை இலக்காக வைத்துள்ள மெக்சிகோ இதை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதே தற்போதைய கேள்வியாக உள்ளது.