கோல்கீப்பர் அதிதி சவுஹான்
இந்திய கால்பந்தாட்ட அணியின் கோல்கீப்பர் அதிதி சவுஹான் தன்னுடைய அணி குறித்தும், அதன் தற்போதைய நிலை, மணிப்பூர் வீராங்கனை பாலா தேவி, இளம் வீராங்கனைகள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் தன்னுடைய கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். ஏஐஎப்எப் டிவிக்காக பேசிய சவுஹான், இந்திய அணியின் தாரக மந்திரம் குறித்தும் தெரிவித்தார்.
வீராங்கனைகள் ஆர்வம்
தான் கால்பந்தாட்ட அணியில் இணைந்தபோது, அணியில் மணிப்பூரை சேர்ந்த வீராங்கனைகளே அதிகமாக இருந்ததாகவும், ஆனால் தற்போது நிலைமை அவ்வாறு இல்லை என்றும் அதிதி சவுஹான் தெரிவித்துள்ளார். அணியில் இணைய அதிகமான வீராங்கனைகள் ஆர்வத்துடன் காத்திருப்பதாகவும் போட்டி அதிகமாக நிலவுவதாகவும் அவர் மேலும் கூறினார்.
வேற்றுமையில் ஒற்றுமை
வீராங்கனைகள் அனைவரும் இணைந்து தாங்கள் கடந்து வந்த பாதை, சோதனைகள், விருப்பங்கள், வருத்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொள்வதாகவும், இதன்மூலம் அவர்களின் அனுபவங்களில் இருந்து பாடங்களை கற்க முடிவதாகவும் அவர் மேலும் கூறினார். வேற்றுமையில் ஒற்றுமையே இந்திய மகளிர் கால்பந்தாட்ட அணியின் தாரக மந்திரமாக உள்ளதாகவும் அதிதி சவுஹான் குறிப்பிட்டார்.
அனுபவத்தை கேட்க ஆர்வம்
ஐரோப்பாவின் ரேஞ்சர்ஸ் எப்சி அணிக்காக விளையாடவுள்ள மணிப்பூர் வீராங்கனை பாலா தேவி அங்கிருந்து வந்தவுடன் அவரது அனுபவத்தையும் கேட்க ஆவலுடன் உள்ளதாகவும், அவரது அந்த அனுபவம் மற்ற வீராங்கனைகளுக்கு பாடமாக இருக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார். அந்த அனுபவத்தை அவர் உற்சாகத்துடன் பகிர்வார் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
தன்னம்பிக்கை அதிகரிக்கும்
பாலா தேவி போன்றவர்களிடம் இருந்து இளம் வீராங்கனைகள் அனுபவப் பாடங்களை கற்க வேண்டும் என்றும் அதிதி தெரிவித்துள்ளார். இதன்மூலம் தன்னம்பிக்கை அதிகரிக்கும் என்றும் தெரிவித்துள்ள அவர், மேலும் சிறப்பான எதிரணியினருடன் விளையாடுவதன்மூலமும் நல்ல அனுபவங்களை பெற முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.