டெல்லி: புகழ்பெற்ற கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக பிரான்ஸ் நாட்டின் முன்னாள் வீரரான ஜினதினே ஜிதானே திடீரென்று அறிவித்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற கால்பந்து அணியான ரியல் மாட்ரிட் அணியின் பயிற்சியாளராக இருந்தவர், 45 வயதாகும் பிரான்ஸ் நாட்டின் முன்னாள் வீரரான ஜினதினே ஜிதானே. சமீபத்தில் நடந்த ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் போட்டியில் ரியல் மாட்ரிட் அணி சாம்பியன் பட்டத்தை தொடர்ந்து மூன்றாவது முறையாக வென்றது.
இந்த ஆண்டுக்கான லா லிகா, கோபா டெல் ரே போன்ற போட்டிகளில் பங்கேற்கும் வாய்ப்பை ரியல் மாட்ரிட் அணி இழந்தது. இதனால் ஜிதானே குறித்து கடும் விமர்சனம் எழுந்தது. ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டம் வென்ற நிலையில், ஜிதானே விலகியுள்ளார்.
2016ல் அவர் கோச்சாக பதவியேற்ற பிறகு ரியல் மாட்ரிட் அணி மூன்று முறை ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் பட்டம், ஒரு முறை லா லிகா பட்டம், இரண்டு முறை ஐரோப்பிய சூப்பர் கோப்பை, இரண்டு முறை பிபா கிளப் அணிகளுக்கான உலகக் கோப்பை, ஸ்பானிஷ் சூப்பர் கோப்பை ஆகியவற்றை வென்றது. ஆனால், இந்த ஆண்டில், இதுவரை ஐரோப்பிய சாம்பியன்ஸ் கோப்பையை மட்டுமே வென்றுள்ளது.
அவருக்கு மாற்றாக புதிய பயிற்சியாளர் யார் என்பதை ரியல் மாட்ரிட் அணி அறிவிக்கவில்லை.