ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்பு
இந்திய மகளிர் ஹாக்கி அணி 36 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த 2016ல் ரியோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்றது. இதனால் இந்திய ஹாக்கி ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்திற்கு உள்ளானார்கள். ஆனால் அந்த பரபரப்பு அடங்குவதற்குள் குரூப் ஸ்டேஜிலேயே தோல்வியுற்று வெளியேறியது. இதனால் ஹாக்கி ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
ஒலிம்பிக்கில் வரலாறு படைக்கும்
இந்நிலையில் கொரோனா காரணமாக அடுத்த ஆண்டிற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வெற்றி பெற்று வரலாறு படைக்கும் என்று அணியின் கோல்கீப்பர் சவீதா நம்பிக்கை தெரிவித்துள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டியில்அனுபவம் இன்மையால் தோல்யடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்களில் வெற்றி
ஆனால் 2016 ரியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பின்னர், கடந்த 4 ஆண்டுகளில் அதிகப்படியான சர்வதேசப் போட்டிகளில் பங்கேற்றுள்ளதாகவும் இதனால் அதிகப்படியான அனுபவம் கிடைத்துள்ளதாகவும் ஆசிய கோப்பை 2017 உள்ளிட்ட தொடர்களின் வெற்றி இதை உறுதிப்படுத்துவதாகவும் சவீதா மேலும் கூறினார்.
தவறுகள் நடைபெறாது
மேலும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் கிடைத்த அனுபவம் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளை எதிர்கொள்ள சிறந்த சந்தர்ப்பமாக அமையும் என்றும் சவீதா மேலும் கூறினார். ரியோ ஒலிம்பிக் தொடரில் செய்த தவறுகள் தற்போது நடைபெறாது என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். ஒவ்வொரு விளையாட்டு வீரர்களுக்கும் ஒலிம்பிக்கில் பங்கேற்பது கனவு என்றும் ரியோ ஒலிம்பிக் மூலம் அது சாத்தியமானதாகவும் அவர் கூறினார்.
இந்தியா வரலாறு படைக்கும்
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் தொடரில் இந்திய மகளிர் ஹாக்கி அணி வரலாறு படைக்க சந்தர்ப்பம் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். அணியில் திறமைவாய்ந்த மூத்த வீராங்கனைகள் மற்றும் துடிப்பான இளம் வீராங்கனைகளின் கலவை உள்ளதால் டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்வோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.