ஜகார்த்தா : ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இன்று இந்தியாவின் இறுதி நாளாகும். இன்று இந்தியாவின் கடைசி போட்டியாக ஆடவர் ஹாக்கி போட்டி அமைந்தது. இதில் மேலும் சிறப்பாக, இந்தியா, பாகிஸ்தான் வெண்கலப் பதக்கதுக்காக மோதும் போட்டியாக இது அமைந்தது.
நேற்று இந்தியா ஆடவர் ஹாக்கி அரையிறுதியில் அதிர்ச்சி அளிக்கும் வகையில் மலேசியா அணியிடம் தோற்றது. இதனால், வெண்கலத்துக்கான போட்டியில் ஆட வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொண்டது இந்தியா.
மிகவும் பரபரப்பாக நடந்த இந்த போட்டியில், இந்தியா முதல் கால் பகுதியில் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதை மூன்றாம் கால் பகுதி வரை தொடர்ந்த இந்தியா, நான்காம் கால் பகுதியில் ஒரு கோல் அடித்தது.
அடுத்த சில நிமிடங்களில் பாகிஸ்தான் ஒரு கோல் அடித்து ஆட்டத்தை 2-1 என மாற்றியது. இன்னும் ஒரு கோல் அடித்தால் பாகிஸ்தான் சமன் செய்யும் என்பதால், இந்தியா தற்காப்பு ஆட்டத்தை கையில் எடுத்தது.
கடுமையான போராட்டத்துக்கு பின் ஆட்டம் 2-1 என முடிவடைந்தது. இந்தியா இந்த வெற்றி மூலம் வெண்கலத்தை வென்றது. இந்தியாவுக்கு இது 69வது பதக்கமாகும்.