தங்கம் வென்றவர்
தொடர்ந்து மூன்று ஆண்டுகள் இந்திய மகளிர் ஹாக்கி அணி கேப்டனாக தங்கம் வென்று கொடுத்துள்ளார் மணிப்பூரை சேர்ந்த சூரஜ் லதா தேவி. 2002 காமன்வெல்த் தொடர், 2003 ஆப்ரோ - ஏசியன் கேம்ஸ் மற்றும் 2004 ஹாக்கி ஆசிய கோப்பை தொடர்களில் அணியை தங்கம் வெல்ல வைத்தார் அவர்.
சக் தே இந்தியா திரைப்படம்
அவரது தலைமையில் இந்திய ஹாக்கி அணி காம்ன்வெல்த் தொடரில் தங்கம் வென்றதை தான் பின்னர் "சக் தே இந்தியா" என்ற திரைப்படமாக பாலிவுட்டில் எடுத்தனர். ஷாருக் கான் நடித்த அந்தப் படம் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று பெரிய வெற்றி பெற்றது.
2005இல் திருமணம்
இவர் மேற்கு ரயில்வே பணியில் இருந்த சாந்தா குமார் சிங் என்பவரை 2005இல் திருமணம் செய்து கொண்டார். அப்போது முதலே சாந்தா குமார், இவரை மோசமான முறையில் நடத்தியதாக கூறுகிறார் சூரஜ் லதா தேவி.
பதக்கம் குறித்த பேச்சு
திருமணம் ஆன போது தன் பதக்கங்கள் மற்றும் தங்கம் வென்ற தருணங்களின் புகைப்படங்கள் ஆகியவற்றை தன் கணவரிடம் காட்டி இருக்கிறார் சூரஜ் லதா தேவி. அப்போது அவரை அவமானப்படுத்தி பேசியதுடன், இதை வைத்து என்ன செய்வது? என கேட்டுள்ளார் சாந்தா குமார்.
அர்ஜுனா விருது பற்றி அவதூறு
பின்னர், சூரஜ் லதா தேவி அர்ஜுனா விருது வென்ற போதும் அதற்காக பெருமைப்படாமல் அவரை மோசமாக தாக்கிப் பேசி உள்ளார். அவரது "மோசமான நடத்தை"யால் தான் அர்ஜுனா விருது கிடைத்ததாக கீழ்த்தரமாக பேசி உள்ளார் சாந்தா குமார்.
நிலம் கேட்டு துன்புறுத்தல்
இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் நிலம் கேட்டு தன் சூரஜ் லதா தேவியை கட்டி வைத்து சுமார் மூன்று மணி நேரம் அடித்துள்ளார். மேலும், ரயில்வே கோச் பேக்டரி நடத்தும் ஹாக்கி தொடர் ஒன்றை சூரஜ் லதா தேவி கவனித்து வந்த போது, அங்கேயும் வந்து அவரை அடித்துள்ளார் சாந்தா குமார்.
பொறுக்க முடியாத நிலை
அதுவரை வெளி உலகுக்கு தன் கணவர் பற்றி கூறாமல், பொறுமை காத்து வந்த அவர், இனியும் பொறுப்பதில் அர்த்தமில்லை என்ற நிலையில், தன் கணவர் மீது காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். தன் கணவர் திருந்துவார் என நினைத்தே தான் பொறுமை காத்ததாக கூறி உள்ளார்.
பெரும் அதிர்ச்சி
இந்திய மகளிர் அணியின் முன்னாள் கேப்டன், அர்ஜுனா விருது வென்ற பெருமைக்குரியவர், அவரது தலைமையிலான அணியின் வெற்றியின் அடிப்படையில் ஒரு திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படி பல பெருமையான அடையாளங்கள் கொண்ட வீராங்கனைக்கு நேர்ந்த கொடுமையை அறிந்து பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.