புவனேஸ்வர் : ஒடிசா மாநிலம் புவனேஸ்வரில் நடை பெற்று வரும் ஹாக்கி உலகக்கோப்பையில் ஞாயிற்றுக்கிழமை நடக்கவுள்ள குரூப் போட்டியில் இந்திய அணி, பெல்ஜியம் அணியை சந்திக்கிறது.
இந்தியா முதல் போட்டியில் தென்னாபிரிக்காவை 5-0 என வீழ்த்தி, பெரிய வெற்றி பெற்று உற்சாகமாக உள்ளது. அடுத்து காலிறுதிக்கு எளிதாக தகுதி பெற வேண்டும் என்றால் இந்திய அணி இந்த போட்டியில் பெல்ஜியம் அணியை வீழ்த்த வேண்டும்.
இந்த போட்டி குறித்து பேசிய இந்திய ஹாக்கி அணியின் பயிற்சியாளர் ஹரேந்திரா, "எந்த அணி அழுத்தத்தை அனுபவித்து ஆடுகிறதோ அந்த அணியே வெற்றி பெறும்" என கூறினார்.
மேலும், "கடந்த 4-5 ஆண்டுகளில் பெல்ஜியம் அணியின் செயல்பாடுகளை பார்த்தால் நல்ல அணியாக இருக்கிறது. நாங்கள் சூழ்நிலைக்கு ஏற்பவே ஆட வேண்டும். அதே போல, இந்திய அணி " என கூறினார்.
2013ஆம் ஆண்டில் இருந்து இந்திய அணி பெல்ஜியம் அணியிடம் தடுமாறி வருகிறது. இந்த காலகட்டத்தில் 13 போட்டிகளில் தோல்வி அடைந்துள்ள இந்தியா, ஐந்தில் வெற்றியும், ஒரு போட்டியில் டிராவும் செய்துள்ளது.
எனினும், கடந்த காலத்தை நாங்கள் நினைக்கப் போவதில்லை என கூறியுள்ளார் இந்திய அணியின் பயிற்சியாளர். இந்தியா இந்த போட்டியில் வெற்றி பெற்றால் ஹாக்கி உலகக்கோப்பையில் அதிக கவனம் பெறும் அணியாக மாறி விடும்.
"சி" பிரிவில் இந்தியா - பெல்ஜியம் மோதும் போட்டி இரவு 7.00 மணிக்கு துவங்குகிறது.