டெல்லி: இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ரித்து ராணி சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க சுமார் 36 ஆண்டுகளுக்கு பின்பு இந்திய மகளிர் ஹாக்கி அணி தகுதி பெற்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் இந்திய மகளிர் ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டன் ரித்து ராணி.
ஆனால், ரித்து ராணி பார்மில் இல்லாததாலும் அவரது மோசமான அணுகுமுறையை காரணம் காட்டியும் ஒலிம்பிக் அணியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். இதனால் வேதனை அடைந்த ரித்து ராணி தற்போது ஓய்வு முடிவை எடுத்துள்ளார்.
இதுபற்றி ஹாக்கி இந்தியா தலைவர் நரீந்தர் பத்ரா கூறுகையில், "சர்வசேத போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதாகவும், அதனால் தேசிய முகாமில் பங்கேற்க முடியாது என்றும் ரித்து ராணி எங்களுக்கு மெயில் அனுப்பினார். ஓய்வு பெறுவது அவரது தனிப்பட்ட முடிவு. அவரது இந்த முடிவிற்கு நாங்களும் ஹாக்கி இந்தியாவும் மரியாதை அளிக்கிறோம். விளையாட்டுக்கும் நாட்டிற்கும் அவர் செய்த சேவைகளுக்காக ஹாக்கி இந்தியா நன்றி தெரிவித்துக்கொள்கிறது" என்றார்.
ஒலிம்பிக் அணியில் இருந்து நீக்கப்பட்ட பின்னர், கடந்த ஆகஸ்ட் 18-ஆம் தேதி பஞ்சாபி பாடகர் ஹர்ஷ் சர்மாவை திருமணம் செய்த ரித்து ராணி, இப்போது தனது சர்வதேச ஹாக்கி வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.