டெல்லி: ஆகஸ்ட் 12, 1948 - இந்திய விளையாட்டில் மறக்க முடியாத நாள். லண்டனில் நடந்த ஒலிம்பிக்கில் இந்தியா தங்கம் வென்றது இந்த நாள்தான். அதற்கு முன் மூன்று முறை தங்கம் வென்றாலும், நாடு சுதந்திரம் பெற்ற பிறகு வென்ற முதல் தங்கம் இதுவாகும். சுதந்திர இந்தியா தங்கம் வென்று, நேற்றுடன் 70 ஆண்டுகளாகிறது.
தேசிய விளையாட்டான ஹாக்கியில் இந்தியா ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்தது. ஒலிம்பிக்கில் 8 தங்கங்கள், ஒரு வெள்ளி மற்றும் 2 வெண்கலப் பதக்கங்கள் என 11 பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.
ஒலிம்பிக் ஹாக்கியில் அதிக தங்கம் என்ற இந்தியாவின் சாதனை தொடர்கிறது. நெதர்லாந்து 5 முறையும், ஆஸ்திரேலியா, பிரிட்டன், ஜெர்மனி தலா 4 முறையும் தங்கம் வென்றுள்ளன.
1948ல் லண்டனில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இந்தியா வென்ற தங்கத்துக்கு தனி சிறப்பு உள்ளது. 1928, 1932, 1936ல் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா தங்கம் வென்றிருந்தது. இருந்தாலும், 1948ல் நடந்த ஒலிம்பிக் தான், சுதந்திரம் பெற்ற பெறகு இந்தியா பங்கேற்ற முதல் ஒலிம்பிக் போட்டியாகும்.
அந்த ஒலிம்பிக்கில் அர்ஜென்டினாவை 9-1, ஆஸ்திரியாவை 8-0, ஸ்பெயினை 2-0 என இந்தியா வென்றது. அரை இறுதியில் நெதர்லாந்தை 2-1 என வென்றது. பைனலில் பிரிட்டனை 4-0 என இந்தியா வென்றது.
1952, 1956, 1964 மற்றும் கடைசியாக 1980ல் இந்தியா தங்கம் வென்றது. இருந்தாலும், 1948 ஒலிம்பிக் தங்கத்துக்கு எப்போதும் தனி சிறப்பு உள்ளது. 70 ஆண்டுகளுக்குப் பிறகும் அது தற்போதும் ஹாக்கி ரசிகர்கள் இடையே அந்த தங்கம் நீங்காத நினைவுகளாக உள்ளது.