டாக்கா: ஆசிய கோப்பை ஹாக்கி இறுதிப் போட்டியில் வலிமையான மலேசியாவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றது இந்திய அணி. டாக்காவில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்தியா 2-1 என மலேசியாவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது.
வங்கதேசத்தில் ஆசிய ஹாக்கி போட்டிகள் நடைபெற்று வந்தன. இதில் மிகவும் சிறப்பாக விளையாடிய இந்திய அணி இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
இறுதி போட்டியில் இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது. இந்த இறுதிப் போட்டி டாக்காவில் நடைபெற்றது.
தொடக்கத்திலேயே ஆதிக்கம் செலுத்தியது இந்திய அணி. ஆட்டத்தின் 10-வது நிமிடத்தில் எஸ்.வி. சுனில் கோல் அடித்தார். இதனால் இந்தியா 1-0 என முன்னிலைப் பெற்றது.
அதன் பின் லலித் உபத்யாய் இன்னொரு கோல் அடித்தார். இதனால் இந்தியா 2-0 என முன்னிலைப் பெற்றிருந்தது.
கடைசியில் ஆட்டம் முடிவடைய 6 நிமிடங்கள் இருந்த நிலையில் மலேசியா அணி ஒரு கோல் அடிக்க 2-1 என புள்ளிகள் இருந்தன. 2-வது கோலை அடிக்க மலேசிய முயற்சித்தும் பலனிளிக்கவில்லை.
இதனால் இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி ஆசியக் கோப்பை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை இந்திய அணி வெல்வது இது 3-வது முறையாகும். 10 ஆண்டுகளுக்குப் பின்னர் ஆசிய கோப்பை சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றுள்ளது இந்தியா.