லண்டன்: பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பையில் அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா டிரா செய்தது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. அதில் வென்றால் காலிறுதிக்கு நுழைய முடியும்.
16 நாடுகள் பங்கேற்கும் பெண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டிகள் நடந்து வருகின்றன. இதில், இங்கிலாந்து, அமெரிக்கா, அயர்லாந்து ஆகிய அணிகளுடன் பி பிரிவில் இந்தியா இடம்பெற்றுள்ளது.
4 பிரிவுகளிலும் முதலிடத்தைப் பிடிக்கும் அணிகள் காலிறுதிக்கு நேரடியாக நுழையும். ஒவ்வொரு பிரிவிலும் 2 மற்றும் 3வது இடத்தைப் பிடிக்கும் அணிகள், பிரிவுகளுக்குள் நடக்கும் பிளே ஆப் சுற்று போட்டியில் விளையாடும். அதில் வெற்றி பெறும் அணிகள் கால் இறுதிக்கு முன்னேறும்.
இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஒலிம்பிக் சாம்பியனான இங்கிலாந்துடன் 1-1 என டிரா செய்தது. அதற்கடுத்த ஆட்டத்தில் அயர்லாந்திடம் 1-0 என தோல்வி அடைந்தது. இந்த நிலையில் நேற்று இரவு நடந்த ஆட்டத்தில் அமெரிக்காவை சந்தித்தது.
இந்த ஆட்டத்தி்ல 1-1 என இந்தியா டிரா செய்தது. இதன் மூலம் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. நாளை நடக்கும் பிளே ஆப் சுற்றில் இத்தாலியை சந்திக்கிறது. அதில் வெல்லும் அணி, ஆகஸ்ட் 2ம் தேதி நடக்கும் காலிறுதியில் அயர்லாந்துடன் மோதும்.
நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஜெர்மனி ஆகியவை காலிறுதிக்கு நேரடியாக நுழைந்துள்ளன.
நேற்று நடந்த ஆட்டத்தில் தரவரிசையில் 7வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் மார்கஸ் போலினோ, 11வது நிமிடத்தில் கோலடிக்க, அந்த அணி 1-0 என முன்னிலை பெற்றது.
அதன்பிறகு 10வது இடத்தில் இருக்கும் இந்திய அணி கோலடிக்கும் முயற்சியில் ஈடுபட்டது. 31வது நிமிடத்தில் கேப்டன் ராணி ராம்பால் கோலடிக்க சமநிலை உருவானது. இறுதியில் 1-1 என டிராவில் முடிந்தது.