வீட்டில் முடங்கிய வீரர்கள்
கொரோனா வைரஸ் பாதிப்பு சர்வதேச அளவில் குறிப்பாக இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த இரண்டு மாதங்களாக வீடுகளில் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் முடங்கியிருந்தனர். இந்நிலையில் சமூக விலகலுடன் கூடிய பயிற்சிகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதையடுத்து, சர்வதேச அளவில் பல போட்டிகளின் பயிற்சிகள் துவங்கப்பட்டுள்ளன.
இரண்டு மாதங்களுக்கு பிறகு பயிற்சி
இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக வீடுகளில் முடங்கியிருந்த இந்திய ஹாக்கி ஆண்கள் மற்றும் பெண்கள் அணியின் வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கடந்த திங்கட்கிழமை முதல் மைதானங்களில் மீண்டும் தங்களது பயிற்சிகளை துவக்கியுள்ளனர். இதனிடையே, அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த பயிற்சிகள் வழங்கப்படுவதாக இந்திய விளையாட்டு ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 1ம் தேதி முதல் துவக்கம்
இந்திய விளையாட்டு ஆணையத்தின் பெங்களூரு வளாகத்தில் கடந்த 1ம் தேதி முதல் ஹாக்கி அணியின் முன்னணி வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருவதாக ஹாக்கி இந்தியா அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. வீரர்களின் பாதுகாப்பை நினைவில் கொண்டு, விதிமுறைகள் கடுமையாக பின்பற்றப்பட்டு வருவதாகவும், வீரர்களுக்கும் இதுகுறித்து அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும் மேலும் கூறியுள்ளது.
காயங்களை தவிர்க்க குறைந்த பயிற்சிகள்
இரண்டு மாதங்கள் கழித்து வீரர்கள் தங்களது பயிற்சிகளை துவங்கியுள்ள நிலையில், அவர்களுக்கு முதல்கட்டமாக குறைந்த அளவிலான பயிற்சிகளே அளிக்கப்படுவதாக சாய் தெரிவித்துள்ளது. மேலும் காயங்களை தவிர்க்கும்வகையில், குறைந்த பட்ச விளையாட்டு பயிற்சிகளே தரப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. இத்தகைய விஷயங்களை கருத்தில்கொண்டே, பயிற்சியாளர்களும் தங்களது பயிற்சிகளை வடிவமைத்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.