கோலாலம்பூர்: இந்திய ஹாக்கி அணிக்கு தற்போது நல்ல காலம் பிறந்துள்ளது. மலேசியாவில் நடக்கும் 7வது சுல்தான் ஆப் ஜோஹர் கோப்பை ஹாக்கிப் போட்டியில் இந்திய ஜூனியர் ஹாக்கி அணி, அமெரி்க்காவை 22-0 என்ற கோல் கணக்கில் வென்றது.
கோல் கீப்பரைத் தவிர மற்ற அனைவரும் கோலடித்துள்ளனர். இதில் இருவர் ஹாட்ரிக் சாதனை புரிந்தனர்.
ஜூனியர் ஹாக்கி அணிகளுக்கான 7வது சுல்தான் ஜோஹர் கோப்பைப் போட்டி மலேசியாவின் கோலாலம்பூரில் நடந்து வருகிறது.
முதல் ஆட்டத்தில் இந்தியா மலேசியாவை 2-1 என்ற கோல் கணக்கி்ல வென்றது. அடுத்தது ஜப்பானை 3-2 என்ற கணக்கில் வென்றது.
நேற்று அமெரிக்காவுக்கு எதிரான போட்டி நடந்தது. ஆட்டத்தில் 2வது நிமிடத்திலேயே முதல் கோல் கிடைத்தது. முதல் பாதியின் இறுதியில் 8-0 என்ற கணக்கி்ல இந்தியா முன்னிலை பெற்றது. சற்று ஓய்வு எடுத்து, அடுத்த பாதியில், 14 கோல்களை அடுத்து, 22-0 என்ற கணக்கில் இந்தியா வென்றது.
இதில் ஹர்மன்ஜித் சிங், அபிஷேக் தலா 4 கோல்களை அடித்தனர். பிரதாப் லாக்ரா, விஷால் அந்தில், தில்பிரீத் சிங் ஆகிய மூவரும் ஹேட்ரிக் கோல்களை அடித்து அசத்தினர்.
கோல் கீப்பரைத் தவிர, 10 பேர் கோலடித்து சாதனைப் படைத்தனர். இதன் மூலம், இந்தத் தொடரில் இந்தியா ஹாட்ரிக் வெற்றியைப் பெற்று, புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
இந்தத் தொடரில் அமெரிக்க அணியின் சோகம் தொடர்கிறது. இதுவரை அந்த அணி 52 கோல்களை விட்டுத் தந்துள்ளது. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 19-0 என்ற கணக்கில் வென்றது. அடுத்தது கிரேட் பிரிட்டன் 11-0 என்று வென்றது. அவர்களே பரவாயில்லை, இந்தியா 22-0 கோல்களை அடித்து பின்னி பெலடித்துள்ளது.