பொருட்கள் கொண்டுவர தடை
1980களில் பல்வேறு பொருட்களை வெளிநாட்டில் இருந்து எடுத்து வர தடை இருந்தது. பாகிஸ்தானிலும் அது போன்ற தடை இருந்தது. அப்போது தான் வெளிநாடு சென்று வந்த ஹாக்கி வீரர்கள் மற்றும் சில அதிகாரிகள் கூட்டு சேர்ந்து கடத்தலில் ஈடுபட்டதாக ஹனிப் கான் தெரிவித்துள்ளார்.
ஹனிப் கான் பேட்டி
இது பற்றி பாகிஸ்தான் செய்தி தொலைக்காட்சியான ஜியோ நியூஸ்-க்கு பேட்டி அளித்துள்ளார் முன்னாள் பாகிஸ்தான் ஹாக்கி அணி கேப்டன் ஹனிப் கான். அவர் கூறி உள்ள சில தகவல்கள் பாகிஸ்தானில் பரபரப்பை கிளப்பி உள்ளது.
கடத்தல்
"நாங்கள் 1983இல் சர்வதேச தொடரில் ஆடி விட்டு ஹாங்காங்கில் இருந்து திரும்பினோம். அந்த காலத்தில் கார் உதிரி பாகங்கள், விசிஆர், கிளாஸ் ஃபிரேம் ஆகியவை தடை செய்யப்பட்டு இருந்தது. அந்த பொருட்கள் அணியின் லக்கேஜுடன் நாட்டுக்குள் கடத்தப்பட்டது" என்றார் ஹனிப் கான்.
வெளியான உண்மை
மேலும், "அந்த காலத்தில் கடத்தப்பட்ட பொருட்களின் மதிப்பு 1.5 கோடி இருக்கும். கஸ்டம்ஸ் அதிகாரிகள் பின்னர் இது பற்றி விசாரணை செய்தார்கள். அந்த கடத்தலில் சில அணி வீரர்கள் மற்றும் அதிகாரிகள் ஈடுபட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது." என்றார்.
மூடி மறைக்கப்பட்டது
அது மட்டுமின்றி இந்த விஷயம் பின்னர் பல்வேறு காரணங்களால் மூடி மறைக்கப்பட்டது என்றும் கூறி அதிர்ச்சியை ஏற்படுத்தினார் ஹனிப் கான். முன்னாள் கேப்டனான அவர் சமீபத்தில் பாகிஸ்தான் ஹாக்கி அணியின் பயிற்சியாளர் மற்றும் மேலாளராகவும் பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பாகிஸ்தான் சர்ச்சைகள்
லாக்டவுன் நேரத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் அணியில் நடந்த பல்வேறு சர்ச்சையான சம்பவங்களை கூறி பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனும் பரபரப்பை கிளப்பி உள்ளார். அதுவும் ஹாக்கி வீரர்கள் கடத்தலில் ஈடுபட்டதாக அவர் கூறி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.