மும்பை: ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டித் தொடருக்கான தீம் சாங்கை உருவாக்கும் பணியில் இசைப் புயல் ஏ. ஆர்.ரஹ்மானும், கவிப் புயல் குல்ஸாரும் இணைந்துள்ளனர்.
ஒடிஷாவில் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான டைட்டில் பாடலை, அதாவது தீம் சாங்கை உருவாக்கும் பொறுப்பு ஏ.ஆர்.ரஹ்மானிடம் வழங்கப்பட்டுள்ளது. இதற்கான பாடல் வரிகளை குல்ஸார் எழுதியுள்ளார். ஜெய் ஹிந்த் ஹிந்த், ஜெய் இந்தியா என்று தொடங்குகிறது இந்தப் பாடல்.
இந்தியாவின் சிறப்பையும், ஹாக்கியின் பாரம்பரியத்தையும் கலந்து பாடல் வரிகளை உருவாக்கியுள்ளாராம் குல்ஸார். இதுகுறித்து ஏ.ஆர்.ரஹ்மான் குறிப்பிடுகையில், நமது விருப்பத்துக்குரிய விளையாட்டான ஹாக்கியை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை. உலகில் நடக்கும் மிகப் பெரிய விளையாட்டுத் தொடர்களில் மிகவும் சிறந்தது இந்த தொடர் என்பதில் சந்தேகமே தேவையில்லை. இதற்காக பெருமைப்படுகிறோம் என்றார்.
ரஹ்மான் இதுபோன்ற சிறப்பு ஆல்பம் செய்வது இது முதல் முறையல்ல. இந்தியாவின் 50வது சுதந்திர தினத்தையொட்டி அவர் வந்தே மாதரம் ஆல்பத்தை வெளியிட்டார். இன்று வரை அது இந்தியாவின் மூலை முடுக்கல்லாம் ஒலித்துக் கொண்டிருக்கிறது என்பது நினைவிருக்கலாம்.
அக்டோபரில் இப்பாடல் வெளியிடப்படவுள்ளது. நவம்பர் 27ம் தேதி ஒடிஷாவின் கலிங்கா ஸ்டேடியத்தில் ஹாக்கி உலகக் கோப்பை தொடக்க விழா நடைபெறுகிறது. அப்போது இந்தப் பாடலை தனது குழுவினருடன் ஏ.ஆர்.ரஹ்மானே பாடவுள்ளார். ஒடிஷாவில் ரஹ்மான் பாடவுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
நவம்பர் 28ம் தேதி முதல் டிசம்பர் 15ம் தேதி வரை புவனேஸ்வரில் ஆடவர் ஹாக்கி உலகக் கோப்பைப் போட்டிகள் நடைபெறவுள்ளன. மொத்தம் 16 நாடுகள் இதில் பங்கேற்கின்றன. இந்தத் தொடரை இந்தியா நடத்துவது இது மூன்றாவது முறையாகும். இதற்கு முன்பு 1982ல் மும்பையிலும், 2010ல் டெல்லியிலும் இந்தத் தொடர் நடந்துள்ளது.