காலிறுதிக்கு தகுதி
ஒலிம்பிக்கில் ஆடவர் ஹாக்கியில் லீக் சுற்று போட்டிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் உள்ள 4 லீக் போட்டிகளில் இதுவரை 3 போட்டிகள் நடைபெற்று முடிந்துள்ளன. இதில் இந்திய அணி ஏற்கனவே 2ல் வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதிப்பெற்றுவிட்டது. இந்நிலையில் 4வது லீக் போட்டி இன்று நடைபெற்றது. இதில் இந்திய அணி, ஜப்பான் நாட்டு அணியை எதிர்த்து போட்டியிட்டது.
தொடக்கமே சாதகம்
இந்த போட்டியில் பெரும் நம்பிக்கையுடன் விளையாடிய இந்திய அணிக்கு தொடக்கத்திலேயே ஒரு கோல் கிடைத்தது. பெனால்டி கார்னர் முறையில் இந்திய வீரர் ஹர்மன்ப்ரீத் சிங் கோல் அடித்து அசத்தினார். இதன் பின்னரும் இந்தியாவின் ஆதிக்கமே தொடர்ந்ததால் ஆட்டத்தின் 17வது நிமிடத்தில் மீண்டும் ஒரு கோல் கிடைத்தது.
விறுவிறுப்பு
இதனால் சுதாரித்துக்கொண்ட ஜப்பான் அணி சிறிது நேரத்திலேயே கோல் அடித்து 2 -1 என சற்று முன்னேறியது. இதன் பின்னர் நீண்ட நேரம் இரு அணிகளிடம் இருந்தும் கோல் ஏதும் வராமல் தடுப்பாட்டம் மேற்கொண்டன. இந்த கடும் போராட்டத்தின் முடிவில் ஜப்பான் அணி மீண்டும் ஒரு கோல் அடித்து 2 - 2 என புள்ளிகளை சமநிலைப்படுத்தியது.
அசத்தல் வெற்றி
இதனால் ஆட்டத்தில் யாருக்கு வெற்றி என்ற பரபரப்பு சூழல் நிலவியது. இரு அணிகளும் கடைசி சில நிமிடங்களில் எப்படியாவது ஒரு கோலை அடித்து முன்னிலை பெற வேண்டும் என போராடின. ஆனால் இந்தியாவுக்கு தான் அது சாதகமாக முடிந்தது. அடுத்தடுத்து 3 கோல்களை அடித்து இந்திய வீரர்கள் ஆச்சரியத்தில் ஆழ்த்தினர். இதனால் ஆட்டத்தின் இறுதியில் 5 - 3 என்ற கோல் கணக்கில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.
வரலாறு படைக்குமா?
ஒலிம்பிக்கில் மட்டும் இதுவரை 11 பதக்கங்களை வென்றிருக்கிறது இந்திய அணி. அதில் 8 தங்கப்பதக்கங்கள், 1 வெள்ளி, 2 வெங்கலப்பதக்கங்கள் ஆகும். வேறெந்த அணியாலும் இன்னமும் இந்த சாதனையை உடைக்க முடியவில்லை. ஆனால் ஒலிம்பிக் போட்டிகளில் இந்திய ஹாக்கி அணி 1980ம் ஆண்டுக்கு பிறகு இதுவரை ஒரு முறை கூட பதக்கத்தை வெல்லவில்லை. பதக்கம் வென்று 41 ஆண்டுகள் ஆகிவிட்டது. எனவே 41 ஆண்டுகால பெருமையை இந்த முறை இந்திய ஆடவர் ஹாக்கி அணி காப்பாற்றுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.