அகமதாபாத்: உலககோப்பை கபடி இறுதிப் போட்டியில் 38-29 என்ற புள்ளிகள் கணக்கில் ஈரானை வீழ்த்தி இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் 3வது உலககோப்பை ஆண்கள் கபடி போட்டி நடைபெற்றது. இதில் இந்தியா, தாய்லாந்து, தென்கொரியா, ஜப்பான், ஆஸ்திரேலியா, ஈரான், அர்ஜென்டினா, போலாந்து, கென்யா, அமெரிக்கா, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய 12 அணிகள் பங்கேற்றன.
இந்த நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டில் இந்தியா - ஈரான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. தொடக்கத்தில் சற்று தடுமாறினாலும் புள்ளிகளை விட்டுக்கொடுக்காமல் இந்திய வீரர்கள் போராடினர். இருப்பினும் ஈரான் அணி இந்தியாவை விட முன்னிலை வகித்தே வந்தது.
முதல் பாதியில் ஈரான் அணி 18- 13 என்ற புள்ளிகள் அடிப்படையில் முன்னிலை வகித்தது. இரண்டாம் பாதியில் சுதாரித்துக்கொண்ட இந்திய வீரர்கள், ரைடு சென்று புள்ளிகள் எடுப்பதிலும், எதிரணி வீரர்களை மடக்கி பிடிப்பதிலும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இதனால் ஈரான் வீரர்கள் திணறினர். ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 38-29 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் உலககோப்பை கபடி போட்டியில் இந்திய அணி மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளது.
ஏற்கனவே 2004, 2007ம் ஆண்டு இறுதிபோட்டிகளிலும் இவ்விரு அணிகளுமே மோதின. இருபோட்டிகளிலும் இந்தியாவே வெற்றிபெற்ற நிலையில், இன்றைய ஆட்டத்திலும் இந்திய அணி வெற்றிபெற்று ஹாட்ரிக் சாம்பியன் என்ற பெருமையை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளில் இந்திய அணி 8 முறை சாம்பியன் ஆகியுள்ளது குறிப்பிடத்தக்கது.