ஹைதராபாத் : தமிழ் தலைவாஸ் அணியும், குஜராத் அணியும் லீக் சுற்றில் தங்கள் முதல் போட்டியில் வெற்றி பெற்றன.
2019 புரோ கபடி லீகின் மூன்றாவது மற்றும் நான்காவது லீக் சுற்றுப் போட்டி நடைபெற்றது. கடந்த சீசனின் சாம்பியன் பெங்களூரு அணி குஜராத் அணியிடம் மோசமாக வீழ்ந்தது.
அதே போல, கடந்த சீசனில் இருந்து மாறுபட்ட அணியுடன் களமிறங்கி இருக்கும் தமிழ் தலைவாஸ் அணி, தெலுகு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றியுடன் இந்த சீசனை துவக்கி உள்ளது.
குஜராத் அணி ரெய்டு புள்ளிகளை விட அதிக டேக்கில் புள்ளிகள் பெற்று பெங்களூரு அணியை வீழ்த்தியது. முதல் இருபது நிமிடத்தில் குஜராத் அணி 21-10 என போட்டியில் முன்னிலை பெற்று இருந்தது. போட்டியின் முடிவில் குஜராத் 42-24 என்ற புள்ளிக்கணக்கில் பெங்களூரு அணியை வீழ்த்தியது.
பெங்களூரு அணியின் நட்சத்திர ரெய்டர்கள் ரோஹித் குமார் மற்றும் பவன் செஹ்ராவத், குஜராத் அணிக்கு முன் ஒன்றும் செய்ய முடியாமல் தவித்தனர். அது தான் அந்த அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக இருந்தது. குஜராத் அணியின் தற்காப்பு அபாரமாக இருந்ததே அந்த அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.
அடுத்து நான்காவது லீக் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி, புதிய வரவான அனுபவ வீரர் ராகுல் சௌதரி மூலம் தெலுகு டைட்டன்ஸ் அணியை திக்கு முக்காட வைத்தது.
இந்தப் போட்டியில் ராகுல் 13 புள்ளிகள் பெற்றுக் கொடுத்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். ராகுல் மட்டுமின்றி, அனுபவ வீரர்களான அஜய் தாக்குர், மன்ஜீத் மற்றும் ஷபீர் சிறப்பாக ஆடினர்.
முதல் பாதியில் தமிழ் தலைவாஸ் 20-10 என முன்னிலை வகித்தது. போட்டியின் முடிவில் 39-26 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது தமிழ் தலைவாஸ். தெலுகு டைட்டன்ஸ் அணி தன் சொந்த மண்ணில் தோல்வி அடைந்தது.