வெளுத்து வாங்கிய இந்தியா
இந்த தொடரில், தன் குரூப்பில் உள்ள ஒவ்வொரு அணிக்கும் எதிராக இரண்டு முறை ஆட வேண்டும். அதன்படி, முதல் போட்டியை பாகிஸ்தானிற்கு எதிராக துவங்கிய இந்தியா, முதல் சந்திப்பில் 36-20 என்ற புள்ளிகளில் எளிதாக வென்றது. இரண்டாவது சந்திப்பில் அதிரடியாக புள்ளிகளை சேர்த்த இந்தியா இறுதியில் 41-17 என்ற கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தியது.
கென்யாவை வீழ்த்திய இந்தியா
மற்றொரு கத்துகுட்டி அணியான கென்யாவை இரண்டு முறையும் வெளுத்து வாங்கிய இந்தியா, அதிக வித்தியாசத்தில் இரண்டு போட்டிகளையும் வென்றது. மொத்தத்தில் 175 புள்ளிகள் எடுத்த இந்திய அணி, வெறும் 76 புள்ளிகளை மட்டுமே விட்டுக் கொடுத்தது. புள்ளிப் பட்டியலில் முதலிடம் பிடித்த இந்தியா, அரை இறுதியில், தென்கொரியாவிற்கு எதிராக விளையாட உள்ளது.
வெற்றிகளை குவித்த ஈரான்
இந்த பக்கம் இந்தியா என்றால், அந்த பக்கம் ஈரான். ஈரான் அணியும், தான் சந்தித்த நான்கு போட்டிகளையும் வென்று இரண்டாவது குரூப்பின் புள்ளி பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது. அனுபவமில்லாத அர்ஜென்டினாவை, துவைத்தெடுத்த ஈரான் அணி, கொரியாவிற்கு எதிரான இரண்டாவது ஆட்டத்தில் தோல்விக்கு அருகில் வந்தாலும், இறுதியில் வென்றது. தற்போது அரை இறுதியில் பாகிஸ்தானை சந்திக்க உள்ளது.
அரை இறுதியில் இந்தியா, ஈரான் வெல்லுமா
அரை இறுதியில், ஈரான் அணிக்கு பாகிஸ்தான் அணி கடுமையான சவால் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல், தென்கொரியா அணியும் இந்தியாவிற்கு ஈடு கொடுத்து ஆடும் என்பதால், ஆட்டம் விறுவிறுப்பாக இருக்கும். இந்திய அணியில் முன்னணி ரைடர்களாக, கேப்டன் அஜய் தாக்கூர், இளம் வீரர்கள் ரிஷான்க் தேவதிகா, மற்றும் ரோஹித் குமார் இருக்கிறார்கள். இவர்கள் உட்பட, அனைத்து இந்திய வீரர்களும் தங்கள் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி குரூப் சுற்று ஆட்டங்களில் வெற்றியை உறுதி செய்தனர். அடுத்து, அரை இறுதியிலும், இதே ஆட்டம் தொடரும் என நம்பலாம்.