ஜகார்த்தா : இந்திய பெண்கள் கபடி அணி ஜப்பானை 43-12 என வீழ்த்தியதன் மூலம் ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியா சார்பாக முதல் வெற்றியை பதிவு செய்தது.
பெண்கள் கபடிப் போட்டியின் குரூப் ஏ பிரிவு முதல் சுற்றுப் போட்டியில் இந்தியா, ஜப்பான் மோதியது. துவக்கம் முதல் முன்னிலையில் இருந்த இந்திய பெண்கள் அணி ஆட்டத்தின் முதல் பாதியில் 19-8 என முன்னிலையில் இருந்தது.
முதல் பாதியில் ஜப்பான் அணியை ஒரு முறை ஆல்-அவுட் செய்து அசத்தியது இந்திய அணி. ஜப்பான் அணி எந்த சந்தர்ப்பத்திலும் இந்திய அணியின் புள்ளிகளின் அருகில் வர முடியவில்லை.
ஜப்பான் அணியின் தடுப்பு ஆட்டம் ஓரளவு நன்றாக இருந்தது. எனினும், அந்த அணியின் ரைடர்கள் பெரிய அளவில் சோபிக்கவில்லை. ஆட்ட நேர முடிவில் இந்திய அணி 43-12 என பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
ஆசிய விளையாட்டுப் போட்டிகள் - 2018
இந்திய பெண்கள் கபடி அணி சென்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றது. அதே போல இந்த முறையும் தங்கம் வெல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்று இந்திய ஆண்கள் கபடி அணியும் தன் முதல் போட்டியில் வங்கதேசத்துடன், பின் இலங்கை அணியுடனும் மோத உள்ளது.