அகமதாபாத்: உலகக் கோப்பை கபடி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
ஆண்களுக்கான 3 வது உலககோப்பை கபடி போட்டி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நேற்று இரவு கோலாகலமாக தொடங்கியது. வருகிற 22-ந் தேதி வரை நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்றுள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.
'ஏ' பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, வங்காளதேசம், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, தென் கொரியா, அர்ஜென்டினா ஆகிய அணிகளும், 'பி' பிரிவில் ஈரான், அமெரிக்கா, போலந்து, கென்யா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய அணிகளும் இடம் பிடித்துள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதியை எட்டும்.
நேற்று நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா அதிர்ச்சி தோல்வி அடைந்தது. தென் கொரியாவிடம் 32-34 என்ற புள்ளி கணக்கில் வீழ்ந்தது இந்தியா.
இந்நிலையில் இந்தியா தனது 2-வது லீக் ஆட்டத்தில் இன்று ஆஸ்திரேலியாவை எதிர்கொண்டது. பரபரப்பான இப்போட்டியில் இந்திய அணி 54-20 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி முதல் வெற்றியைப் பதிவு செய்துள்ளது. இதன்மூலம், புள்ளி பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.