உலக சாம்பியன்ஷிப் தொடர்
2020 கபடி உலக சாம்பியன்ஷிப் தொடரை பாகிஸ்தான் நடத்த உள்ளது. இது அதிகாரப்பூர்வ கபடி சாம்பியன்ஷிப் தொடர் தானா? என்பது உறுதியாக தெரியவில்லை. எனினும், பெரிய அளவில் இந்த தொடரை நடத்த பாகிஸ்தான் விளையாட்டுத் துறை செயல்பட்டு வருகிறது.
பத்து நாடுகள்
இந்த கபடி சாம்பியன்ஷிப் தொடரில் பத்து நாடுகள் பங்கேற்க உள்ளதாக விளம்பரம் செய்து வந்தது பாகிஸ்தான். பாகிஸ்தான், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, ஈரான், கென்யா, சியர்ரா லியோன், அசர்பெய்ஜான் ஆகியவை தான் அந்த பத்து நாடுகள்.
இந்திய வீரர்கள் குழு
பாகிஸ்தான் நாட்டுக்கு இந்திய விளையாட்டு வீரர்கள் சமீப காலமாக செல்லாத நிலையில், 60 பேர் அடங்கிய இந்திய கபடி வீரர்கள் குழு ஒன்று பாகிஸ்தான் சென்றது. இந்திய கபடி கூட்டமைப்பின் அனுமதி இன்றி அந்த வீரர்கள் பாகிஸ்தான் சென்ற தகவல் பின்னர் தெரிய வந்தது.
இந்தியா அதிர்ச்சி
இது இந்திய அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவை இந்த விஷயத்தில் கடும் அதிருப்தியில் உள்ளன. யாருடைய அனுமதியும் இன்றி "இந்திய கபடி அணி" என்ற பெயரில் இந்திய வீரர்கள் ஆடச் சென்றது சலசலப்பை உண்டாக்கியது.
14 வீரர்கள் மட்டுமே தேவை
சர்க்கிள் கபடி சாம்பியன்ஷிப் தொடர் தான் நடைபெற உள்ளது என கூறப்படுகிறது. அது வழக்கமாக ஆடும் ஏழு பேர் கொண்ட கபடிப் போட்டியில் இருந்து மாறுபட்டது. அதில் 10 வீரர்கள் அணியில் இடம் பெறுவர். 4 மாற்று வீரர்கள் போட்டியின் இடையே அணியில் சேர்ந்து ஆடலாம். ஆக ஒரு அணிக்கு 14 பேர் தேவை. ஆனால், 60 இந்திய வீரர்கள் பாகிஸ்தான் சென்றது ஏன்?
திட்டம் இதுதான்
இங்கே தான் பாகிஸ்தான் அதிகாரிகளின் தில்லாலங்கடி வேலைகள் இருப்பதாக கூறப்படுகிறது. பத்து நாடுகள் பங்கேற்பதாக கூறினாலும், அதில் உண்மை இல்லை என்கிறார்கள். எப்படி இந்திய அணி அதிகாரப்பூர்வமாக பங்கேற்கவில்லையோ அதே போல, மற்ற சில அணிகளும் உண்மையில் அந்த தொடரில் அதிகாரப்பூர்வமாக பங்கேற்கவில்லை. அந்த நாடுகளின் அணிகளில் இந்திய வீரர்களை நிரப்ப உள்ளது பாகிஸ்தான்.
குரு நானக் தேவ் விழா
அதற்குத் தான் 60 இந்திய வீரர்களை பாகிஸ்தான் அதிகாரிகள் அழைத்துள்ளனர் என கூறப்படுகிறது. சர்க்கிள் கபடி ஆடும் வீரர்கள் பஞ்சாப் மாநிலத்தில் தான் அதிகம். பஞ்சாப் மாநில கிரிக்கெட் சங்கம் மற்றும் அதன் வீரர்களை தொடர்பு கொண்ட பாகிஸ்தான் அதிகாரிகள் குரு நானக் தேவ்வின் 550வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த தொடரை நடத்த உள்ளோம் என கூறி உள்ளனர்.
அப்படி எதுவும் இல்லை
அதை பஞ்சாப் மாநில கபடி சங்கம் அதை ஏற்றுக் கொள்ளாத நிலையில், 60 வீரர்களை மட்டும் பாகிஸ்தான் அதிகாரிகள் திரட்டி உள்ளனர். உண்மையில், இந்த சாம்பியன்ஷிப் தொடரில், குரு நானக் தேவ் பிறந்தநாள் விழா எதுவும் நடக்கப் போவதில்லை என கூறப்படுகிறது.
புகார்
இந்த தில்லு முள்ளு வேலைகளை அறிந்த பாகிஸ்தான் அமெச்சூர் சர்க்கிள் கபடி கூட்டமைப்பு, பாகிஸ்தான் விளையாட்டு போர்டுக்கு எதிராக குரல் எழுப்பி, வழக்கும் தொடர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் முகமது சர்வார் பட் கூறுகையில், "கபடியின் பெயரில் மிகப் பெரிய ஃபிராடு வேலைகள் நடந்து வருகிறது" என வெளிப்படையாக கூறி இருக்கிறார்.
இந்தியா நடவடிக்கை
பாகிஸ்தான் நடத்தும் அக்கப்போர் ஒரு புறம் இருக்க, இந்திய விளையாட்டு அமைச்சகம் மற்றும் ஒலிம்பிக் சங்கம், பாகிஸ்தான் சென்ற வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அவர்கள் நாடு திரும்பும் போது பெரிய சிக்கலை எதிர்கொள்ள வேண்டியதாக இருக்கும்.