அஹ்மதாபாத் : 2019 புரோ கபடி லீக் தொடரில் நேற்று நடைபெற்ற லீக் போட்டிகளில் ஹரியானா ஸ்டீலர்ஸ் அணி யுபி யுத்தா அணியையும், பெங்கால் வாரியர்ஸ் குஜராத் பார்ச்சூன்ஜெயன்ட்ஸ் அணியையும் வீழ்த்தின.
முதலில் நடந்த லீக் போட்டியில் ஹரியானா அணி, 3 புள்ளிகள் வித்தியாசத்தில் யுபி யுத்தா அணியை வீழ்த்தியது. ஹரியானாவின் விகாஷ் கொண்டாலா ரெய்டும் மற்றும் சுனில் தடுப்பாட்டமும் அசத்தலாக அமைந்தது.
முதல் பாதி மிகவும் விறுவிறுப்பாக சென்றது. இரு அணிகளும் புள்ளிகளை வாரிக் குவித்தன. இரு அணிகளும் ஒருவரை, ஒருவர் முந்திக் கொண்டே சென்றன. முதல் பாதியில் யுபி அணி 21 - 19 என்ற புள்ளிக்கணக்கில் முன்னிலையில் இருந்தது.
கடைசி மூன்று நிமிடங்களில் இரு அணிகளும் 27 - 27 என சம அளவில் இருந்தன. கடைசி நிமிடத்தில் ஹரியானா அணி, யுபி அணியை ஆல்-அவுட் செய்து 36 - 33 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது. ஹரியானா அணி தொடர்ந்து தன் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றுள்ளது.
ஒரே கல் 2 மாங்காய்.. ஷாரூக் கான் தந்த செம ஆஃபர்.. பேட்டை தூக்கிப் போட்டு ஓடி வந்த அதிரடி மன்னன்!
மற்றொரு போட்டியில் குஜராத் அணியை 2 புள்ளிகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ் அணி. குஜராத் அணி இரண்டாம் பாதியில் சிறப்பாக ஆடியது. போட்டியை 26 - 26 என சம அளவில் எடுத்துச் சென்று இதயத் துடிப்பை அதிகரித்தது.
கடைசி ரெய்டு சென்ற பிரபஞ்சன் செய்த தவறால் பெங்கால் அணிக்கு இரண்டு புள்ளிகள் கிடைத்தது. அந்த அணி 28 - 26 என வெற்றி பெற்றது. குஜராத் அணி தொடர்ந்து தன் மூன்றாவது போட்டியில் தோல்வி அடைந்துள்ளது.