பாட்னா : பாட்னாவில் நடைபெற்ற புரோ கபடி லீக் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தியது. மற்றொரு போட்டியில் பெங்களூரு புல்ஸ் அணி, பெங்கால் வாரியர்ஸ் அணியை ஒரு புள்ளி வித்தியாசத்தில் வீழ்த்தியது.
முதல் போட்டியில் ஜெய்ப்பூர் அணியின் டிஃபன்ஸ் மிகவும் சிறப்பாக அமைந்தது. சந்தீப் துல் மற்றும் அமித் ஹூடா சிறப்பாக ஆடி, பாட்னா அணியின் நட்சத்திர ரெய்டர் பர்தீப் நார்வாலை சுமார் 23 நிமிடங்கள் களத்துக்கு வெளியே இருக்கும்படி செய்தனர்.
முதல் பாதியில் ஜெய்ப்பூர் அணி 15 - 9 என முன்னிலையில் இருந்தது. ஒரு கட்டத்தில் பாட்னா அணி 14 - 18 என போட்டியில் ஜெய்ப்பூர் அணியின் அருகில் வந்தது. ஆனால், அப்போது பர்தீப் நார்வாலை வெளியேற்றிய ஜெய்ப்பூர் அணி, தொடர்ந்து புள்ளிகளை அள்ளியது.
இறுதியில் 34 - 21 என்ற புள்ளிக் கணக்கில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி வெற்றி பெற்றது. பாட்னா சொந்த மண்ணில் நடந்த போட்டியில் தோல்வி அடைந்தது.
அடுத்த போட்டியில் பெங்களூரு அணியின் பவன் செஹ்ராவத் அதிரடி ரெய்டுகளால் 29 புள்ளிகள் எடுத்து மலைக்க வைத்தார். பெங்கால் அணியின் பிரபஞ்சன் மற்றும் மணிந்தர் சிங் இருவரும் தலா 10 புள்ளிகளுக்கும் மேல் எடுத்தனர்.
ஆனால், அவர்கள் இருவரையும் விட தனியாக அதிக புள்ளிகள் எடுத்துத் தள்ளிய பவன் செஹ்ராவத் தோல்வி அடைய வேண்டிய போட்டியில் வெற்றி தேடித் தந்தார்.
முதல் பாதியில் பெங்கால் அணி 21 - 18 என முன்னிலையில் இருந்தது. அதன் பின் பெங்கால் அணி முன்னே ஓட, பெங்களூரு அணியின் பவன் அந்த அணியை துரத்திக் கொண்டே சென்றார். ஒரு கட்டத்தில் 34 - 23 என மோசமாக பின் தங்கி இருந்தது பெங்களூரு.
38வது நிமிடத்தில் தான் பெங்களூரு அணி முதன் முறையாக போட்டியில் முன்னிலை பெற்றது. அடுத்த சில நிமிடங்களில் போட்டி முடிய, 43 - 42 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் வெற்றி பெற்றது பெங்களூரு புல்ஸ். மிகவும் விறுவிறுப்பான கபடிப் போட்டிகளில் ஒன்றாக மாறியது இந்தப் போட்டி.