ஆமதாபாத்: அதிக புள்ளிகள் வித்தியாசத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி புணேரி பால்டான் அணி, பெங்கால் அணிக்கு அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது. மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 27-24 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வென்றுள்ளது.
5-ஆவது சீசன் புரோ கபடி லீக் தற்போது நடந்து வருகிறது. இதில், ஆமதாபாத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் இரு அணிகளும், முதல் 10 நிமிடங்களின் முடிவில் 5-5 என்ற புள்ளிகள் கணக்கில் சமநிலை பெற்றன.
புணேரி பால்டான் வீரர் ஜிபி மோர் ரைடின் மூலம் தனது 4-ஆவது புள்ளியைப் பெற, அந்த அணி 7-5 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. இதன்பிறகு அசத்தலாக ஆடிய புணேரி பால்டான், 15-ஆவது நிமிடத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணியை ஆல் அவுட்டாக்கியது. இதனால் புணேரி பால்டான் 12-5 என்ற கணக்கில் முன்னிலைக்கு வந்தது.
இதன்பிறகு 18-ஆவது நிமிடத்தில் மீண்டும் ஆல் அவுட்டாகும் நிலைக்குத் தள்ளப்பட்ட பெங்கால் வாரியர்ஸ், சூப்பர் டேக்கிள் மூலம் அதிலிருந்து தப்பியது. முதல் பாதி ஆட்ட நேர முடிவில் புணேரி பால்டான் 17-10 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
அபாரமாக ஆடிய புணேரி பால்டான் 30-15 என்ற கணக்கில் முன்னிலை பெற, அப்போதே பெங்கால் அணியின் படுதோல்வி உறுதியாகிவிட்டது. இறுதியில் புணேரி பால்டான் 34-17 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி கண்டது.
இதே போல மற்றொரு ஆட்டத்தில் குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ் அணி 27-24 என்ற புள்ளிகள் கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வென்று முன்னிலை பெற்றுள்ளது.
இன்று நடக்கும் ஆட்டங்களில், ஹரியானா ஸ்டீலர்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் இரவு 8 மணிக்கு மோதுகின்றன. அதே போல குஜராத் பார்ச்சூன்ஜயன்ட்ஸ்-தெலுகு டைட்டன்ஸ் அணிகள் இரவு 9 மணிக்கு மோதுகின்றன. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.