சென்னை : பெங்கால் வாரியர்ஸ் - டபாங் டெல்லி இடையே நடந்த புரோ கபடி லீக் போட்டி டையில் முடிந்தது.
2019 புரோ கபடி லீக் தொடரின் சென்னை சுற்றுப் போட்டிகள் நேற்று துவங்கின. முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ் அணியை அதிரடியாக வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ் அணி.
அடுத்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் - டபாங் டெல்லி அணிகள் மோதின. முதல் பாதியில் டெல்லி அணி முன்னிலையில் இருந்தது. அடுத்த சில நிமிடங்களில் பெங்கால் வாரியர்ஸ் அணி அருமையாக போட்டியை மாற்றியது.
அதனால், அந்த அணி வெற்றி பெறுவது போன்ற சூழ்நிலை ஏற்பட்டது. ஆனால், கடைசியில் போட்டி டை ஆனது. இரண்டு அணிகளுமே ஏமாற்றம் அடைந்தன.
முதல் பாதியில் டெல்லி அணி 11 - 18 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தன. இரண்டாம் பாதியில் பெங்கால் அணியின் பிரபஞ்சன் அதிரடியாக ரெய்டுகளில் புள்ளிகளை குவித்தார்.
கடைசி ஐந்து நிமிடங்கள் இருக்கும் போது டெல்லி அணியை எட்டிப் பிடித்தது பெங்கால் அணி. அப்போது 25 - 25 என சம நிலையில் இருந்தது போட்டி.
அடுத்து கடைசி ரெய்டுக்கு முன் இரு அணிகளும் 30 - 30 என்ற சம நிலையில் இருந்தன. அப்போது பிரபஞ்சன் ரெய்டு சென்றார். முதலில் அவர் புள்ளி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், டெல்லி அணி ரிவ்யூ செய்தது. ரிவ்யூவில் அவர் யாரையும் தொடவில்லை என்பது தெரிந்தது.
அதனால், வெற்றிக் கொண்டாட்டத்தில் இருந்த பெங்கால் அணி அதிர்ச்சி அடைந்தது. அதே போல, கடைசி ஐந்து நிமிடம் வரை போட்டியில் முன்னிலையில் இருந்த டெல்லி அணி போட்டி டை ஆனது கண்டு ஏமாற்றம் அடைந்தது.
எனினும், பெங்கால் அணியின் இரண்டாம் பாதி ஆட்டம் அட்டகாசமாக இருந்தது. பெரிய வீழ்ச்சியில் இருந்து மீண்ட அந்த அணி, இறுதியில் வெற்றி பெற்று இருந்தால் இந்த சீசனின் சிறந்த போட்டிகளில் ஒன்றாக இது மாறி இருக்கும்.