கொல்கத்தா : பெங்கால் வாரியர்ஸ் - குஜராத் பார்ச்சூன்ஜெயன்ட்ஸ் இடையே ஆன புரோ கபடி லீக் போட்டி டையில் முடிந்தது.
இறுதி நிமிடத்தில் இரு அணிகளுக்கும் அதிரடி முயற்சி செய்தால் வெற்றி பெறலாம் என்ற நிலை இருந்தது. எனினும், தோல்வி அடைந்து விடுவோமோ என்ற அச்சத்தில் போட்டியை டை செய்தனர்.
2019 புரோ கபடி லீக் போட்டிகளின் ஒரு பகுதி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரின் 78வது லீக் போட்டி பெங்கால் வாரியர்ஸ் - குஜராத் பார்ச்சூன்ஜெயன்ட்ஸ் இடையே நடைபெற்றது.
இந்தப் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி முதல் பாதியில் சிறிய அளவில் முன்னிலை பெற்றது. எனினும், இரண்டாம் பாதியில் இரு அணிகளும் புள்ளிகளை பெற முடியாமல் முட்டி மோதின.
தடுப்பாட்டம் ஆடவே இரு அணிகளும் ஈடுபாடு காட்டியதால், மிகவும் குறைந்த புள்ளிகள் மட்டுமே இந்தப் போட்டியில் எடுக்கப்பட்டது. இறுதியில் 25 - 25 என்ற புள்ளிக் கணக்கில் போட்டி டை ஆனது.
முதல் பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 15 - 13 என்ற புள்ளிக் கணக்கில் முன்னிலையில் இருந்தது. இரண்டாம் பாதியின் துவக்கத்தில் குஜராத் அணி சிறிது நேரம் ஆதிக்கம் செலுத்தியது. எனினும், போட்டி ஒரு கட்டத்தில் 19 - 19 என்ற சம நிலையை எட்டியது.
கடைசி நேரத்தில் 25 - 25 என்ற சம நிலையில் இருந்த போது குஜராத் அணியின் ரோஹித் குலியா ரெய்டு சென்றார். அப்போது அவரும் புள்ளி எடுத்து வெற்றி பெற அதிரடி முயற்சி எடுக்கவில்லை. அதே போல, "அவரை டேக்கில் செய்தால் வெற்றி பெறலாமே!" என்ற திட்டத்தை பெங்கால் அணியும் செயல்படுத்தவில்லை.
இரு அணிகளுக்குமே எதிரணி ஒரு புள்ளி பெற்று விட்டால் நமக்கு தோல்வி கிடைக்கும் என்ற பயம் இருந்ததோ, என்னவோ, இரு அணிகளும் எந்த முயற்சியும் எடுக்கவில்லை. இதை அடுத்து போட்டி 25 - 25 என்ற நிலையில் டை ஆனது.