நொய்டா : பாட்னா பைரேட்ஸ் அணியின் பர்தீப் நார்வால் விஸ்வரூபம் எடுத்து பெங்கால் வாரியர்ஸ் அணியை துவம்சம் செய்தார்.
2019 புரோ கபடி லீக் தொடரில் நடந்த 124வது போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் - பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின, இந்தப் போட்டியில் பாட்னா அணியின் பர்தீப் நார்வால் 36 புள்ளிகளை அள்ளி தனி ஆளாக கலக்கினார்.
பாட்னா அணி 69 - 41 என்ற புள்ளிக் கணக்கில் பெங்கால் அணியை வீழ்த்தியது. இரு அணிகளும் ரெய்டு புள்ளிகளை குவித்ததால் இந்தப் போட்டி பெரும் சுவாரசியமான போட்டியாக அமைந்தது.
தடுப்பாட்டம் தான் இந்தப் போட்டியின் முக்கிய வித்தியாசமாக அமைந்தது. பாட்னா பைரேட்ஸ் அணி 17 டேக்கில் புள்ளிகள் பெற்ற நிலையில், பெங்கால் அணியால் 7 டேக்கில் புள்ளிகள் மட்டுமே பெற முடிந்தது. பாட்னா அணி இந்தப் போட்டியில் எடுத்த 41 ரெய்டு புள்ளிகளில் 36 புள்ளிகள் பர்தீப் மட்டுமே எடுத்தவை.'
முதல் பாதியில் பாட்னா அணி 27 - 17 என்ற அளவில் முன்னிலையில் இருந்தது. ஆட்ட நேர இறுதியில் 69 - 41 என்ற புள்ளிக் கணக்கில் அபார வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் பிளே - ஆஃப் முன்னேறி விட்ட பெங்கால் அணி தங்கள் அடுத்தகட்ட வீரர்களை தயார் செய்ய இந்தப் போட்டியில் முன்னணி வீரர்களை ஆடவைக்கவில்லை. அதே சமயம், பாட்னா அணி பிளே - ஆஃப் செல்லும் வாய்ப்பை தவற விட்டாலும் பெருமைக்காக ஆடியது.