சென்னை : 2019 புரோ கபடி லீக்கில் வியாழன் அன்று நடந்த ஒரே லீக் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி, பாட்னா பைரேட்ஸ் அணியை அபாரமாக வீழ்த்தியது.
பெங்கால் அணியில் மணிந்தர் சிங் அசத்தல் ரெய்டுகளால் அணிக்கு பலம் சேர்த்தார். ரிங்கு நார்வால் டேக்கில் செய்வதில் தன் திறமையை காட்டி பெங்கால் அணிக்கு வலு சேர்த்தார்.
இந்தப் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் ஆல்-ரவுண்டர் மோனுவை ஆட வைத்தது. அப்படி இருந்தும் அந்த அணி தோல்வி அடைந்தது. தொடர்ந்து புள்ளிப் பட்டியலில் பாதாளத்தில் இருக்கிறது பாட்னா பைரேட்ஸ்.
இந்தப் போட்டியில் பாட்னா பைரேட்ஸ் அணி முதல் பாதி வரை சிறப்பாகவே ஆடியது. முதல் பாதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 15 - 14 என ஒரு புள்ளி வித்தியாசத்தில் தான் முன்னிலையில் இருந்தது.
இரண்டாம் பாதி துவங்கிய இரண்டாவது நிமிடத்தில் பாட்னாவை முதல் ஆல்-அவுட் செய்தது பெங்கால் வாரியர்ஸ். அடுத்து 11 நிமிடங்கள் மீதம் இருந்த போது இரண்டாவது ஆல்-வுட் செய்ய, அப்போதே பெங்கால் அணி 13 புள்ளி வித்தியாசத்தில் முன்னிலை பெற்றது. அதன் பின் பாட்னா அணி வெற்றி பெறுவது கடினம் என்ற நிலை ஏற்பட்டது.
இறுதியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 35 - 26 என்ற புள்ளிக் கணக்கில் வெற்றி பெற்றது. பாட்னா அணியின் தோல்விக்கு முக்கிய காரணம், அதிரடி ரெய்டர் பர்தீப் நார்வால் அதிக நேரம் களத்துக்கு வெளியே இருந்தது தான். அவரை வெளியே இருக்கும் படி திட்டம் போட்டு ஆடியது பெங்கால் வாரியர்ஸ்.